/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஆசியானுக்கு பரிந்துரைத்த 18 சுற்றுலா நகரங்களில் மதுரை புறக்கணிப்பு
/
ஆசியானுக்கு பரிந்துரைத்த 18 சுற்றுலா நகரங்களில் மதுரை புறக்கணிப்பு
ஆசியானுக்கு பரிந்துரைத்த 18 சுற்றுலா நகரங்களில் மதுரை புறக்கணிப்பு
ஆசியானுக்கு பரிந்துரைத்த 18 சுற்றுலா நகரங்களில் மதுரை புறக்கணிப்பு
ADDED : மார் 08, 2025 03:35 AM
மதுரை : ஏற்கனவே ஆசியானுக்கு பரிந்துரைத்த 18 சுற்றுலா நகரங்கள் பட்டியலில் மதுரை விமான நிலையத்தை மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சகம் சேர்க்க வேண்டும். இப்பிரச்னையில் தமிழக அரசு தலையிட வேண்டும்.
2015 ஜனவரி முதல் ஆசியான் ஒருமித்த விமானப் போக்குவரத்து சந்தை அமலுக்கு வந்தது. இதன்படி இந்தியாவுக்கும் தென்கிழக்காசியாவில் உள்ள 10 நாடுகளுக்கும் அதிகளவில் சுற்றுலாப்பயணிகள் சென்று வர கூடுதலான விமான சேவைகளை இயக்க வேண்டும் என்பதற்காக 18 சுற்றுலா நகரங்களின் பட்டியலை இந்தியா பரிந்துரைத்துள்ளது.
இந்த 18 நகரங்களில் உள்ள விமான நிலையங்களுக்கு சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, புரூனே, வியட்நாம், பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, மியான்மர், கம்போடியா, லாவோஸ் ஆகிய நாடுகளின் விமானங்கள் இயங்கலாம். இந்த புதிய வழித்தடங்களில் விமான சேவை வழங்க இருதரப்பு விமான நிலைய சேவை ஒப்பந்தங்கள் (பாசா) செய்ய தேவையில்லை. ஆசியான் - இந்திய விமானப் போக்குவரத்து ஒப்பந்தத்தின் கீழ் எத்தனை முறையும் விமான சேவை அளிக்கலாம்.
தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து புகழ் பெற்றது மதுரை. இங்கிருந்து ராமேஸ்வரம், கொடைக்கானல், குற்றாலம், கன்னியாகுமரி செல்வதற்கான போக்குவரத்து வசதி உள்ளது. இந்திய சிவில் விமானப் போக்குவரத்துத்துறை பரிந்துரைத்த 18 சுற்றுலா நகரங்களில் தமிழகத்தில் திருச்சி மட்டுமே இடம்பெற்றுள்ளது.
இப்பட்டியலில் உள்ள கஜூராஹோ நகர் உட்பட பல நகரங்களுக்கு ஆசியான் நாடுகளிலிருந்து நேரடி விமான சேவை அளிக்கும் வாய்ப்பே இல்லை. தகுதி வாய்ந்த மதுரை நகரம் இடம்பெறாதது ஏமாற்றம் அளிப்பதாக மதுரை அக்ரி மற்றும் அனைத்துத் தொழில் வர்த்தகச் சங்கத் தலைவர் ரத்தினவேலு மதுரையில் தெரிவித்தார்.
அதிர்ச்சியாக உள்ளது
அவர் கூறியதாவது: 2023, மார்ச் 7ல் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள 'பாயின்ட்ஸ் ஆப் கால்' பட்டியலில் இந்த 18 நகரங்கள் உலகில் உள்ள பல நாடுகளுடன் விமான சேவை பெறுவதற்காக சேர்க்கப்பட்டுள்ளன. இந்தப் பட்டியலில் மதுரை சேர்க்கப்பட்டிருந்தால் பல ஆசியான் நாடுகளிலிருந்து விமான நிறுவனங்கள் மதுரைக்கு நேரடி விமான சேவை அளித்திருக்கும். தென் தமிழகம் தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சி பெற்றிருக்கும். 'பாசா' ஒப்பந்தம் இல்லாமல் அனைத்து ஆசியான் நாடுகளுடனும் ஒரே நேரத்தில் விமானத் தொடர்பு கிடைக்கக் கூடிய நல்ல வாய்ப்பு மதுரைக்கு மறுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியாக உள்ளது.
மதுரையிலிருந்து இரவு 11:30 மணிக்கு புறப்பட்ட மதுரை --- சிங்கப்பூர் விமான சேவையை மதியம் 1:30 மணிக்கு மாற்றி தினசரி சேவையாக்கிய நிலையில் பயணிகள் ஆதரவு இல்லை என்று கூறி மார்ச்சுடன் சேவை நிறுத்த திட்டமிட்டுள்ளது.
இந்த விமானத்தை வேறு ஏதோ வழித்தடத்திற்கு மாற்ற திட்டமிட்டுள்ளதால் மதுரை விமானநிலைய வளர்ச்சிக்கு எதிராக செயல்படுகின்றனர் என நினைக்கத் தோன்றுகிறது. ஆசியானுக்கு பரிந்துரைத்த 18 சுற்றுலா நகரங்கள் பட்டியலில் மதுரையை சேர்க்க வேண்டும். மதுரை - சிங்கப்பூர் சேவையை நிறுத்தாமல் மீண்டும் இரவு 11:30 மணிக்கு மாற்ற வேண்டும். முதல்வர் ஸ்டாலின் இப்பிரச்னையில் தலையிட்டு மதுரையை மீட்க வேண்டும் என்றார்.