/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மரங்கள் அறியும் பயணம்: மரபு நடை பயணம்
/
மரங்கள் அறியும் பயணம்: மரபு நடை பயணம்
UPDATED : ஜூன் 05, 2025 04:15 AM
ADDED : ஜூன் 05, 2025 01:28 AM

மதுரை: மரங்கள் அறியும் பயணம் (ட்ரீ வாக்), இயற்கை பண்பாட்டு பயணங்கள் மூலம் மதுரை மாவட்டத்தின் கோயில் காடுகளை காப்பதிலும் மதுரையின் பசுமையை பராமரிப்பதிலும் கவனம் செலுத்துகின்றன மதுரை கிரீன் நர்சரி அமைப்பு, மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளை.
இன்று (ஜூன் 5) உலக சுற்றுச்சூழல் தினம். வெவ்வேறு பாதைகளில் பயணம் செய்தாலும் மதுரையின் மரக்காடுகளைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதே ஒரே நோக்கமாக உள்ளது. 20 ஆண்டுகளாக அதை உரக்கச் சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம் என்கிறார் மதுரை கிரீன் திட்ட ஒருங்கிணைப்பாளர் சிதம்பரம்.
130 இடங்களில் 'ட்ரீ வாக்'
வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்பதற்கான முயற்சிகளை 20 ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறோம். ஆண்டுதோறும் 5000 மரக்கன்றுகளை பொதுமக்களுக்கு வழங்குவது தான் எங்கள் இலக்கு. வீட்டுக்கு ஒரு மரம் வளர்க்கும் திட்டத்தில் நகரம், கிராமங்களுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி கன்றுகள் வழங்குகிறோம். திருப்பரங்குன்றத்தில் திருப்பரங்குன்றம் - அவனியாபுரம் செல்லும் ரோட்டில் உள்ள மயானத்தின் பின்பகுதியில் ஒரு ஏக்கரில் 1300 கன்றுகளை நடவு செய்தோம். இடையபட்டி போலீஸ் பயிற்சி மையத்தில் 6500 மரக்கன்றுகள் வழங்கினோம். அவர்கள் அதை பராமரிப்பதால் வனம் போல உருவாகி விட்டது. தானம் அறக்கட்டளையுடன் இணைந்து செயல்படுகிறோம்.
மருதம், கடம்பத்திற்கு சிறப்பு
இந்தாண்டு உலகச் சுற்றுச்சூழல் தினத்தில் மதுரையின் பாரம்பரிய மருதம், கடம்ப மரங்களை வழங்க உள்ளோம். மரங்களை காக்கும் உணர்வை மீண்டும் கொண்டு வர நடைபயணம் மேற்கொள்கிறோம். மாதந்தோறும் 3வது ஞாயிறு அன்று மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களில் உள்ள கோயில் காடுகள், தனியார் பள்ளி, கல்லுாரிகள் பராமரிக்கும் வனங்களுக்கு 15ஆயிரத்திற்கு மேற்பட்டோரை அழைத்துச் செல்கிறோம். காடுகள் இருப்பதால் ஆயிரக்கணக்கான உயிரினங்கள் வாழ்கின்றன என்பதால் எந்த வகை காடாக இருந்தாலும் பாதுகாக்க வேண்டும். 'ட்ரீ வாக்' வர விரும்புபவர்களை வேன் மூலம் இலவசமாக அழைத்துச் செல்கிறோம் என்றார். அலைபேசி: 91591 53233.
ஆவணப்படுத்துவதும் முக்கியமே
மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளை உறுப்பினர் விஸ்வநாத்:
மாதம் ஒருமுறை இயற்கை பண்பாட்டு பயணம் என்ற பெயரில் இடையபட்டி, மஞ்சமலை கோயில்காடு, அய்யனார் அணை உட்பட 30 இடங்களுக்கு இயற்கை ஆர்வலர்களை அழைத்துச் சென்றுள்ளோம். ஒவ்வொரு இடங்களில் வாழும் ஊர்வன, பறவை, பூச்சியினங்களையும் மரங்களையும் ஆவணப்படுத்துகிறோம். இதுவரை 250 மரங்களை ஆவணப்படுத்தியுள்ளோம். இடையபட்டி கோயில் காடுகளில் இயற்கையாகவே முளைத்து வளர்கின்றன. இதை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கும் போது தான் மரங்கள் உயிர்ப்புடன் இருக்கும்.
பறவை, மரங்கள் ஆய்வாளர்கள், தொல்லியல் துறை ரீதியான துறை வல்லுநர்களையும் அழைத்துச் சென்று அந்த இடத்தின் பெருமை, அங்குள்ள மரம், செடி, கொடி, பல்லுயிர்களை காண்பிக்கிறோம். ஆவணப்படுத்தப்படாத புதிய பல்லுயிர் தலங்களுக்கு ஒவ்வொரு முறையும் ஆர்வமுள்ளோரை அழைத்துச் செல்கிறோம். ஆய்வில் கண்டறிந்ததை தொகுத்து தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம்.
தவிர ஊர்வனம் அமைப்பின் மூலம் மதுரை திருநகர் பகுதிகளில் மட்டும் 500 மரங்களை வளர்த்துள்ளோம். ஐந்தாண்டுகளில் மதுரையில் எல்லீஸ்நகர், சூர்யாநகர், விருதுநகர், துாத்துக்குடியில் மட்டும் 12ஆயிரம் மரக்கன்றுகள் நட்டுள்ளோம். மரங்கள் இருந்தால் தான் பல்லுயிர்கள் பெருகும் என்றார். அலைபேசி: 99408 32133.