/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்த பின் குழந்தை பெற்ற பெண்; மதுரை அரசு மருத்துவமனையில் சாதனை
/
சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்த பின் குழந்தை பெற்ற பெண்; மதுரை அரசு மருத்துவமனையில் சாதனை
சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்த பின் குழந்தை பெற்ற பெண்; மதுரை அரசு மருத்துவமனையில் சாதனை
சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்த பின் குழந்தை பெற்ற பெண்; மதுரை அரசு மருத்துவமனையில் சாதனை
ADDED : அக் 16, 2024 05:35 AM

மதுரை : மதுரை அரசு மருத்துவமனையில் 2018 ம் ஆண்டில் 26 வயதில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்த பெண்ணுக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது.
சென்னை அரசு மருத்துவக்கல்லுாரியின் 20 ஆண்டு ஆய்வின் படி 1091 பேருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டதில் 201 பெண்கள் குழந்தைப்பேறு வயதுக்குட்பட்டவர்கள். அவர்களில் 14 பேர் கர்ப்பம் தரித்து 9 பேர் குழந்தை பெற்றுள்ளனர்.
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண்கள் குழந்தை பெறுவது சவாலான விஷயம். மதுரை அரசு மருத்துவமனை மகப்பேறு டாக்டர்கள், பிற துறை டாக்டர்களின் தொடர் கண்காணிப்பில் மதுரையைச் சேர்ந்த 32 வயது பெண் அறுவை சிகிச்சையின் மூலம் ஆண் குழந்தை பெற்றது சாதனையான விஷயம் என்கின்றனர் டீன் அருள் சுந்தரேஷ்குமார், மகப்பேறு துறைத்தலைவி மகாலட்சுமி, சிறுநீரக அறுவை சிகிச்சை துறைத்தலைவர் ஞானசேகரன், சிறுநீரகவியல் பேராசிரியர் பாலமுருகன் ஆகியோர்.
அவர்கள் கூறியதாவது:
இந்த பெண்ணுக்கு 23 வயதில் திருமணம் நடந்தது. அதன் பின்பே நாள்பட்ட சிறுநீரக கோளாறு இருப்பது மதுரை அரசு மருத்துவமனையில் கண்டறியப்பட்டு, மூன்றாண்டுகள் சிறுநீரகவியல் துறையில் டயாசிலிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டது.
2018 ல் அவரது தாயிடம் இருந்து சிறுநீரகம் தானமாக பெறப்பட்டு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மாற்று அறுவை சிகிச்சை செய்ததால் மாதந்தோறும் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள 'இம்யூனோ சப்ரஷன்' மருந்துகள் இலவசமாக வழங்கப்படுகிறது.
இந்நிலையில் இப்பெண் கர்ப்பம் தரிப்பது குறித்து டாக்டர்கள் ஆலோசனை வழங்கினர். குழந்தைக்கு பிரச்னை வரக்கூடாது என்பதற்காக 'இம்யூனோ சப்ரஷன்' மருந்துக்கு பதிலாக மாற்று மருந்து இலவசமாக வழங்கப்பட்டு மகப்பேறு, சிறுநீரகவியல் நிபுணர்கள் கண்காணிப்பில் கர்ப்பகாலம் கண்காணிக்கப்பட்டது. அக்.2ல் அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பெற்ற நிலையில் தாய், சேய் தனித்தனியாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.
தற்போது குணமடைந்த நிலையில் வீடு திரும்பினர் என்றனர்.