/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அனைத்திந்திய அண்ணா திமுக அறிவாலயம்; உதயகுமார் கிண்டல்
/
அனைத்திந்திய அண்ணா திமுக அறிவாலயம்; உதயகுமார் கிண்டல்
அனைத்திந்திய அண்ணா திமுக அறிவாலயம்; உதயகுமார் கிண்டல்
அனைத்திந்திய அண்ணா திமுக அறிவாலயம்; உதயகுமார் கிண்டல்
UPDATED : பிப் 28, 2026 06:25 AM
ADDED : பிப் 28, 2026 06:10 AM
மதுரை: ''பதவிக்காக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் 1.0, தர்மயுத்தம் 2.0 ஆரம்பித்தார். தற்போது அறிவாலயத்தில் சேர்ந்து தர்மயுத்தம் 3.0 ஆரம்பித்து விட்டார். அ.தி.மு.க., நிர்வாகிகளை தி.மு.க., சேர்த்து வருகிறது. இதனால் அண்ணா அறிவாலயம், தற்போது அனைத்திந்திய அண்ணா தி.மு.க., அறிவாலயமாக மாறிவிட்டது. முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்,'' என, மதுரையில் அ.தி.மு.க., சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவர் உதயகுமார் கூறினார்.
அவர் கூறியதாவது: பன்னீர்செல்வம் தி.மு.க.,விற்கு விசுவாசமாக இருந்துள்ளார் என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அவர் ஆரம்பத்தில் காங்கிரசில் இருந்தார். அதைதொடர்ந்து அ.தி.மு.க.,வில் இணைந்தார். சேவல் சின்னத்தில் ஜெயலலிதா நின்ற போது அவருக்கு எதிராக போடி தொகுதியில் இரட்டைப் புறாவிற்கு வேலை செய்தார்.
பின் கட்சி ஒன்றான பிறகு அ.தி.மு.க.,வில் இணைந்து எம்.எல்.ஏ., வருவாய்த்துறை அமைச்சர், ஜெ.,வுக்கு சோதனை வந்த நேரங்களில் முதல்வர், அதை தொடர்ந்து நிதி அமைச்சர், பொதுப்பணித்துறை அமைச்சர், நெடுஞ்சாலைத் துறை அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர், எதிர்க்கட்சி துணைத்தலைவர் இப்படி பல்வேறு பதவிகளை தொண்டர்களின் உழைப்பால் பெற்றார்.
ஜெ., மறைவுக்கு பின் ஆட்சிக்கு எதிராக வாக்களித்தார். அவரை மன்னித்து முன்னாள் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பதவி வழங்கினார். கடந்த சட்டசபை தேர்தலில் அவர் வேலை செய்யவில்லை. 2021 தேர்தலில் கூட ஸ்டாலினுக்கு வாழ்த்து சொல்லி இருப்பார். தனக்கு அதிகாரம், பதவி வேண்டும் என்றால் எந்த எல்லைக்கும் செல்வார். தனக்கு பதவி இல்லை என்றால் அழிந்து போக வேண்டும் என்று நினைப்பார். 'அ.தி.மு.க., ஆட்சிக்கு வராது. தென் தமிழகத்தில் யாரையும் பழனிசாமி வளரவிட மாட்டார்' என்ற பச்சைப் பொய் கூறுகிறார்.
எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியில் இருந்து அவரை நீக்கிய பின்பு தென் மாவட்டத்தை சேர்ந்த எனக்குத்தான் அந்த வாய்ப்பை பழனிசாமி வழங்கினார். ஜெயலலிதா இருக்கும் காலத்திலே 'அமைதிப்படை அமாவாசையாக' பன்னீர்செல்வம் இருந்தார். தன்னைத் தவிர யாரும் வளரக்கூடாது என்று நினைத்தார். காளிமுத்து, சத்தியமூர்த்தி, சேடப்பட்டி முத்தையா, கருப்பசாமி பாண்டியன் இப்படி பல பேர் ஜெ.,வின் 'குட் புக்' கில் இருந்தனர். அவர்கள் கதையை பன்னீர்செல்வம் எப்படி முடித்தார் என்பது அனைவருக்கும் தெரியும். தென் மாவட்டங்களில் இவரைத் தவிர யாரையும் வளரவிடவில்லை.
அறிவாலயத்தில் அடைக்கலமாவது செத்த பிணத்திற்கு சமம். அ.தி.மு.க.,விற்கு கெட்ட நேரம் விலகி நல்ல நேரம் வந்துவிட்டது. பதவிக்காக தர்மயுத்தம் 1.0, தர்மயுத்தம் 2.0 ஆரம்பித்தார். தற்போது அறிவாலயத்தில் சேர்ந்து தர்மயுத்தம் 3.0 ஆரம்பித்து விட்டார். அ.தி.மு.க., நிர்வாகிகளை தி.மு.க., சேர்த்து வருகிறது. இதனால் அண்ணா அறிவாலயம், தற்போது அனைத்திந்திய அண்ணா தி.மு.க., அறிவாலயமாக மாறிவிட்டது. தி.மு.க., தொண்டர்களை நம்பி ஸ்டாலின் இல்லை. தி.மு.க., படையும் இல்லை. ஜெ., படையை நம்பித்தான் ஸ்டாலின் உள்ளார்.
தி.மு.க.,வில் பன்னீர்செல்வம் எந்த பதவி பெற்றாலும் அது துரோகத்திற்கு கிடைத்த பரிசாக இருக்கும். ஸ்டாலின் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பதவிக்காக எந்த எல்லைக்கும் பன்னீர்செல்வம் செல்வார். அ.தி.மு.க., வில் சாமானிய தொண்டன் முதலமைச்சராக அறிவிக்கப்படலாம். தி.மு.க., வில் பன்னீர்செல்வத்தை முதலமைச்சராக அறிவிப்பார்களா.
இவ்வாறு உதயகுமார் கூறினார்.

