ADDED : செப் 09, 2025 05:45 AM
மதுரை: அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமியின் 'மக்களை காப்போம்-தமிழகத்தை மீட்போம்,' பிரசார பயணம் திருச்சி துறையூர் பஸ் ஸ்டாண்ட் அருகே ஆக., 24 ல் நடந்தது. அப்பகுதியிலுள்ள ஒரு மகால் அருகே ஒருவர் மயக்கமடைந்து விழுந்து கிடந்ததாக தகவல் வந்ததன் அடிப்படையில் 108 ஆம்புலன்ஸ் சென்றது.
அ.தி.மு.க.,வை சேர்ந்த பாலமுருகவேல், விக்கி, தீனதயாளன், பொன்காமராஜ் உள்ளிட்ட சிலர் வழிமறித்து, 'இங்கு ஏன் வந்தீர்கள்,' என கேள்வி எழுப்பி ஆம்புலன்ஸ் மற்றும் அதிலிருந்த ஊழியர்களை தாக்கியதாக துறையூர் போலீசார் வழக்கு பதிந்தனர். பாலமுருகவேல், விக்கி, தீனதயாளன், பொன்காமராஜ் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முன்ஜாமின் மனு தாக்கல் செய்தனர்.
நீதிபதி எஸ்.ஸ்ரீமதி விசாரித்தார். மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் மகேந்திரன் ஆஜரானார். நீதிபதி,'மனுதாரர்களுக்கு முன் ஜாமின் அனுமதிக்கப்படுகிறது. வாரம் ஒருமுறை போலீசில் ஆஜராக வேண்டும்,' என உத்தரவிட்டார்.