ADDED : நவ 12, 2025 12:49 AM
மதுரை: தனியார் வங்கிகளை தேசிய மயமாக்க வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மேலவெளி வீதியில் அனைத்து வங்கி ஊழியர்கள் வேலைநேரம் முடிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு வங்கி ஊழியர் சம்மேளன இணைச் செயலாளர் குமரன் கூறியதாவது: பெடரல் வங்கி ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் மீதுள்ள வழக்கை ரத்து செய்ய வேண்டும். பாங்க் ஆப் பரோடா நிதியுதவியின் கீழ் செயல்படும் நைனிடால் வங்கி நஷ்டத்தில் இயங்குவதால் அதை மூட நிர்வாகம் திட்டமிடப்பட்டுள்ளது. அதை பாங்க் ஆப் பரோடா வங்கியுடன் இணைக்க வேண்டும்.
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி ஊழியர்களுக்கான ஓய்வு வயது 58 ஆக உள்ளது. அனைத்து வங்கிகளில் இருப்பதைப் போல 60 வயது என்று அறிவிக்க வேண்டும். தனியார் வங்கிகளில் ஓய்வுக்கு பின் வழங்கப்படும் கருணைத்தொகையை அதிகரிக்க வேண்டும். தனியார் வங்கிகளில் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றார்.
மதுரை, ராமநாதபுரம் மாவட்ட வங்கி ஊழியர் சங்கத் தலைவர் டேவிட் வினோத்குமார், தனியார் வங்கி ஊழியர்கள் சங்கச் செயலாளர் செல்வம், எல்.ஐ.சி., ஊழியர் சங்க மதுரை மண்டல செயலாளர் ரமேஷ்கண்ணன் பங்கேற்றனர்.

