/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
குன்றத்தில் கனமழையால் தேரோட்டம் ரத்து சப்பரத் தேரில் சுவாமி வீதி உலா
/
குன்றத்தில் கனமழையால் தேரோட்டம் ரத்து சப்பரத் தேரில் சுவாமி வீதி உலா
குன்றத்தில் கனமழையால் தேரோட்டம் ரத்து சப்பரத் தேரில் சுவாமி வீதி உலா
குன்றத்தில் கனமழையால் தேரோட்டம் ரத்து சப்பரத் தேரில் சுவாமி வீதி உலா
ADDED : டிச 14, 2024 05:16 AM

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் சில நாட்களாக பெய்து வரும் மழையால் நேற்று காலை கார்த்திகை தீபத் திருவிழா தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது. சகடையுடன் கூடிய சப்பரத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை ரத வீதிகளில் உலா நிகழ்ச்சி நடந்தது.
கார்த்திகை தீபத் திருவிழாவில் ஒன்பதாம் நாள் காலையில் 16 கால் மண்டபம் அருகே சிறிய வைரத் தேரில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை எழுந்தருளி, ரதவீதிகளில் தேரோட்டம் நடப்பது வழக்கம்.
சில நாட்களாக தொடர் மழை பெய்வதால், தேர் வலம் வரும் ரத வீதிகளின் சாலைகளில் அதிக ஈரப்பதம் இருக்கிறது. வேகமாக செல்லும் தேரை நிறுத்தவும், திருப்பங்களில் தேரை திருப்பவும் குடில் மரக்கட்டைகள் பயன்படுத்தப்படுகிறது.
தேரின் சக்கரங்கள் இரும்பால் ஆனவை என்பதால் குடில்கட்டைகளை பயன்படுத்தும்போது, தேர் வழுக்கி விபத்துகள் ஏற்படாமல் தடுக்கவும், உற்ஸவர்கள் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் விக்கிரகங்கள், பக்தர்கள் பாதுகாப்பு கருதி கோயில் ஸ்தானிகப்பட்டரால் கருத்துரு வழங்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து அறங்காவலர் குழு பரிசீலித்து கோயிலின் ஆகம விதிகளுக்குட்பட்டு, சகடையுடன் கூடிய சப்பரத்தில் (சப்பரத்தேர்) சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் ரத வீதிகளில் புறப்பாடு செய்யப்பட்டது என கோயில் துணை கமிஷனர் சூரிய நாராயணன் தெரிவித்தார்.--

