ADDED : அக் 29, 2025 06:46 AM

சோழவந்தான்: சோழவந்தான் அருகே பாலகிருஷ்ணாபுரத்தில் பாசன நிலங்களில் கழிவுநீர் கலப்பதால் பயிர்கள் சேதம் அடைவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
விவசாயி ரங்கநாதன் கூறியதாவது: இங்குள்ள திடீர் நகர் பகுதியில் ஏராளமான பாசன நிலங்கள் உள்ளன. இப்பகுதியில் முறையான சாக்கடை வசதி இல்லை. மழைக்காலங்களில் மழை, கழிவு நீர் சேர்ந்து இரும்பாடி மந்தைக்குளம் செல்லும் கால்வாயில் கலக்கிறது.
கால்வாய் பல ஆண்டுகளாக துார்வாரப்படாததால் தண்ணீர் செல்ல முடியாமல் கழிவு நீர் முழுவதும் பாசன நிலங்களுக்குள் செல்கிறது.
அறுவடைக்கு பயிர்கள் தயாரான நிலையில் கழிவு நீரால் ஈரப்பதம் ஏற்பட்டு பயிர்கள் அழுகும் நிலை உள்ளது. மேலும் விவசாயிகள் நிலங்களுக்குள் இறங்கி பணிகள் செய்ய முடியாத நிலையும் ஏற்படுகிறது.
துர்நாற்றம் வீசி அப்பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடு நிலவு கிறது.
கழிவு நீரில் வேலை செய்யும் விவசாயிகளின் கால்களில் அரிப்பு ஏற்பட்டு சிரமம் அடைகின்றனர். அறுவடை இயந்திரம் நிலங்களில் பதியும் நிலை உள்ளதால் அறுவடை பணிகளும் தாமதமாகிறது. மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

