/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மேயர் விவகாரத்தில் தி.மு.க.,வுக்கு கம்யூ., நெருக்கடி கூட்டணிக்குள் புகைச்சல்
/
மேயர் விவகாரத்தில் தி.மு.க.,வுக்கு கம்யூ., நெருக்கடி கூட்டணிக்குள் புகைச்சல்
மேயர் விவகாரத்தில் தி.மு.க.,வுக்கு கம்யூ., நெருக்கடி கூட்டணிக்குள் புகைச்சல்
மேயர் விவகாரத்தில் தி.மு.க.,வுக்கு கம்யூ., நெருக்கடி கூட்டணிக்குள் புகைச்சல்
ADDED : ஜன 24, 2026 05:04 AM
மதுரை: மதுரை மாநகராட்சியில் மேயர் பதவி காலியாக உள்ளதால் மார்க். கம்யூ., கட்சி துணைமேயருக்கு 'பொறுப்பு மேயர்' அங்கீகாரம் வழங்க வலியுறுத்தி ஆளுங்கட்சிக்கு மறைமுக நெருக்கடி கொடுக்க துவங்கியுள்ளது. இதனால் கூட்டணிக்குள் புகைச்சல் ஏற்பட்டுள்ளது.
இம்மாநகராட்சியின் ரூ.150 கோடி சொத்துவரி முறைகேடு விவகாரத்தில் ஆளுங்கட்சி மேயராக இருந்த இந்திராணி, 5 மண்டல தலைவர்கள், 2 நிலைக்குழுத் தலைவர்கள் பதவியை ராஜினாமா செய்தனர். மேயர் இல்லாததால் துணைமேயரான மார்க். கம்யூ.,வின் நாகராஜனுக்கு 'பொறுப்பு மேயர்' அங்கீகாரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
ஆனால் 4 கவுன்சிலரே உள்ள அக்கட்சிக்கு பொறுப்பை வழங்க தி.மு.க., தயாராக இல்லை. கூட்டணியில் இருந்தாலும் மதுரையில் தி.மு.க.,- மார்க்சிஸ்ட் இடையே முட்டல் மோதல் போக்கு நீடிக்கிறது. கவுன்சில் கூட்டம் துணைமேயர் தலைமையில் நடத்த வேண்டும் என்பதால் நான்கு மாதங்களாக அக்கூட்டத்தை கூட நடத்த ஆளுங்கட்சி விரும்பவில்லை.
மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தை நடத்த வேண்டும் என உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டதில் 'மேயர் இல்லாதபட்சத்தில் துணை மேயரே, மேயராக செயல்படலாம். மாமன்ற கூட்டம் நடத்தலாம்,' என அறிவுறுத்தி தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.
தி.மு.க.,வினர் கூறியதாவது: மேயர் இல்லாத நிலையில் கமிஷனர் சித்ரா செயல்பாடுகள் அரசுக்கு திருப்தியளிப்பதாகவே உள்ளது. சொத்துவரி முறைகேடு வழக்கில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் இறுதி விசாரணை அறிக்கை தாக்கல் செய்வதில் இழுத்தடிக்கிறது. வழக்கு முடிவுக்கு வராமல் புதிய மேயர், மண்டல தலைவர்கள் பதவிகளை தேர்வு செய்ய வேண்டாம் என்ற நிலைப்பாட்டில் அரசும் உள்ளது. இதனால் 'நான்கு மாதங்களாகியும் ஒரு மேயரை நியமிக்க முடியாத ஆளுங்கட்சியாக உள்ளது' என அ.தி.மு.க., விமர்சித்து வருவதால் ஆளுங்கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ள நிலையில், 'பொறுப்பு மேயராக தன்னை செயல்பட அனுமதிக்க வேண்டும்' என துணைமேயர் தரப்பும் மறைமுகமாக பொதுநல வழக்குகளை தாக்கல் செய்ய வைக்கிறது.
ஆளுங்கட்சி நிலைப்பாட்டை ஆதரிக்க வேண்டியது கூட்டணி கட்சி தர்மம். ஆனால் மதுரையில் மீறுகிறது. இதனால் கூட்டணி தான் பாதிக்கும் என்றனர்.

