/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அலுவலர்கள் பதவி உயர்வு இழுத்தடிக்கும் கல்வித்துறை
/
அலுவலர்கள் பதவி உயர்வு இழுத்தடிக்கும் கல்வித்துறை
ADDED : டிச 28, 2024 06:58 AM
மதுரை : அரசு பள்ளி, அலுவலகங்களில் பணியாற்றும் அலுவலர்களுக்கான பதவி வழங்காமல் கல்வித்துறை அதிகாரிகள் இழுத்தடிப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.
மாநில அளவில் அரசு பள்ளிகள், பி.இ.ஓ., டி.இ.ஓ., சி.இ.,ஓ அலுவலகங்களில் பணியாற்றுவோர் என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அலுவலர்கள் பணியாற்றுகின்றனர்.
இவர்களுக்கும் ஆசிரியர்கள் போல் கலந்தாய்வு மூலம் பணிமாறுதல், பதவி உயர்வு அளிக்கப்படும். ஆனால் கல்வி அலுவலர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பதவி உயர்வு வழங்கப்படவில்லை.
ஆறு மாதங்களுக்கு முன் அதற்கான பதவி உயர்வு கலந்தாய்வு அறிவிக்கப்பட்டபோதும் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அலுவலர்கள் பதவி உயர்வில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் கூறியதாவது: இளநிலை உதவியாளர், உதவியாளர்,
இருக்கை கண்காணிப்பாளர், கண்காணிப்பாளர், நேர்முக உதவியாளர், நிதிக்காப்பாளர் என கல்வித்துறை அலுவலர்களுக்கான பதவி உயர்வுகள் வழங்கப்படுகின்றன.
நீதிமன்றம் வழக்கு காரணமாக கடைசியாக நடத்த வேண்டிய பதவி உயர்வு கலந்தாய்வு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
ஆனால் வழக்கை எதிர்த்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை கல்வித்துறை கிடப்பில் போட்டு விட்டது. இதனால் அலுவலர்களின் பதவி உயர்வு ஒவ்வொரு நிலையிலும் தடைபட்டு ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே ஒவ்வொரு ஆண்டும் டி.என்.பி.எஸ்.சி., மூலம் தேர்வு செய்யப்படுவோர் இத்துறையில் காலியிடங்களில் நேரடியாக நியமிக்கப்படுவதால் பல நிலைகளில் பதவி உயர்வு பாதித்துள்ளது. குறிப்பாக 2013 - 2014 ல் பணியேற்ற 500க்கும் மேற்பட்டோர் செலக் ஷன் கிரேடு அந்தஸ்து பெற்றும் காலியிடம் பிரச்னையால் இன்னும் பதவி உயர்வு கிடைக்காமல் திண்டாடுகின்றனர். அலுவலர்களுக்கு இதுபோல் உள்ள பிரச்னைகளை ஆய்வு செய்து, தகுதியானவர்களுக்கு உரிய பதவி வழங்க கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.