/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மண்டை ஓட்டின் அடியில் 'எண்டோஸ்கோபி' சிகிச்சை
/
மண்டை ஓட்டின் அடியில் 'எண்டோஸ்கோபி' சிகிச்சை
ADDED : பிப் 19, 2026 05:46 AM
மதுரை: மண்டை ஓட்டின் அடியில் செய்யப்படும் எண்டோஸ்கோபி அறுவை சிகிச்சை குறித்த முதல் மாநாடு, மதுரை மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் நேற்று துவங்கியது.
மதுரை அரசு மருத்துவக் கல்லுாரியுடன் இணைந்து நடத்தும் இம்மாநாட்டில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த முதுநிலை மருத்துவ நிபுணர்கள் பங்கேற்றனர்.
மருத்துவமனையின் மூளை நரம்பியல் அறுவை சிகிச்சைத் துறைத் தலைவர் டாக்டர் செல்வமுத்துக்குமரன் பேசுகையில்,''தேசிய மருத்துவ நிபுணர்களைக் கொண்டு தமிழகத்தில் முதன்முறையாக மண்டை ஓட்டு அடிப்பகுதி சிகிச்சைக்காக 3 நாட்கள் மாநாடு நடக்கிறது. மண்டை ஓட்டின் முன்பகுதி, நடுப்பகுதி, மூளைத்தண்டுக்கு அருகில் உள்ள இடம், மூக்கு, சைனஸ் பகுதிகளுக்குப் பின்னால் உள்ள இடம், தண்டுவடத்தின் மேல் எலும்புடன் இணைந்திருக்கும் பகுதிகளில் ஊடுருவிச் சென்று கட்டிகளை அகற்ற முடியும்''என்றார்.
முதுநிலை நிபுணர் டாக்டர் செந்தில்குமார் பேசுகையில், ''இந்தத் தொழில்நுட்பம் மூலம் அறுவை சிகிச்சையின் போது மூளையின் உள்ளுறுப்புகளை டாக்டர்கள் தெளிவாகப் பார்த்து, சரியான பாதையில் சென்று சிகிச்சையளிக்க முடியும். மூளையின் மிக ஆழமான பகுதியில் இருக்கும் கட்டிகளைக் கூட, அருகில் உள்ள நல்ல திசுக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் முழுமையாக அகற்ற முடியும். மேலும், இது குறைவான ஊடுருவல் கொண்ட சிகிச்சை என்பதால் நோயாளிகள் அதிகநாட்கள் மருத்துவமனையில் தங்க வேண்டியதில்லை'' என்றார்.
காது, மூக்கு, தொண்டை சிகிச்சைத் துறைத்தலைவர் டாக்டர் நாகேஸ்வரன், மூளை நரம்பியல் அறுவை சிகிச்சைத் துறை நிபுணர் டாக்டர் கவுதம் குஞ்சா, நிர்வாகி திலீப் கலந்து கொண்டனர்.

