ADDED : பிப் 12, 2026 05:52 AM
மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் ஹஜ் யாத்திரை செல்வோருக்கான தடுப்பூசி செலுத்தும் முகாம் நேற்று தொடங்கியது.
டீன் அருள் சுந்தரேஷ்குமார் கூறியதாவது:
மதுரை மாவட்டத்தில் ஹஜ் யாத்திரைக்குச் செல்லும் 70 பெண்கள் உட்பட 150 பேருக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. அனைவருக்கும் மூளைக்காய்ச்சலுக்கான தடுப்பூசி, 65 வயதுக்கு மேற்பட்டோருக்கு பறவைக் காய்ச்சல் தடுப்பூசி, 16 வெளிநாட்டு பயணிகளுக்கு போலியோ சொட்டு மருந்து அளிக்கப்பட்டது. விடுபட்டவர்கள் இன்று காலை 9:00 முதல் மதியம் ஒரு மணி வரை நடக்கும் முகாமில் பயன்பெறலாம் என்றார்.
மருத்துவ கண்காணிப்பாளர் குமரவேல், பொதுமருத்துவத்துறை நிபுணர் சையது பகாவுதீன் உசைனி, ஆர்.எம்.ஓ., க்கள் சரவணன், முரளிதரன், பொது சுகாதாரத்துறை டாக்டர் கபீர், மாவட்ட ஹஜ் பயணக்குழு ஒருங்கிணைப்பாளர் மன்சூர் அலி அகமது கலந்து கொண்டனர்.

