/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரையில் விரைவில் 'மெமு' ரயில் சேவை ரயில்வே இணை அமைச்சர் பரிசீலனை
/
மதுரையில் விரைவில் 'மெமு' ரயில் சேவை ரயில்வே இணை அமைச்சர் பரிசீலனை
மதுரையில் விரைவில் 'மெமு' ரயில் சேவை ரயில்வே இணை அமைச்சர் பரிசீலனை
மதுரையில் விரைவில் 'மெமு' ரயில் சேவை ரயில்வே இணை அமைச்சர் பரிசீலனை
ADDED : அக் 28, 2024 05:07 AM

மதுரை : 'மதுரை கோட்டத்தில் 'மெயின்லைன் எலக்ட்ரிக் மல்டிபிள் யூனிட்' (மெமு) வகை ரயில் சேவையை துவக்குவது குறித்து மத்திய ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா பரிசீலிப்பதாக உறுதியளித்துள்ளார்' என அகில் பாரதிய கிரஹக் பஞ்சாயத்தின் (ஏ.பி.ஜி.பி.,) தென் தமிழக ஒருங்கிணைப்பாளர் சத்தியபாலன் தெரிவித்தார்.
ஆன்மிக தலம், சுற்றுலாத் தலம், உயர்நீதிமன்ற கிளை, பல்கலை, சிறப்பு மருத்துவமனைகள் உட்பட முக்கியமான அமைப்புகள் உள்ள மதுரைக்கு, தென் மாவட்டத்தினர் பல ஆயிரம் பேர் தினமும் கல்வி, வேலைக்காக மதுரை வருகின்றனர். பக்கத்து மாவட்டங்கள், கிராமங்களில் இருந்து பல ஆயிரம் டன் விளைபொருட்கள் மதுரை சந்தைக்கு வருகின்றன.
இதனால் மதுரையில் 'மெமு' ரயில்களை இயக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பலரிடமும் உள்ளது. தெற்கு ரயில்வேயில் திருச்சி, திருவனந்தபுரம், பாலக்காடு, சேலம், சென்னை கோட்டங்களில் 'மெமு' ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஆனால் மதுரை கோட்டத்தில் ஒரு ரயில் கூட இயக்கப்படவில்லை.
200 கி.மீ., வரை துாரம் கொண்ட நகரங்களுக்கு இடையேயான ரயில் போக்குவரத்துக்கு 'மெமு' வகை ரயில்கள் உகந்தவை. மதுரையில் இருந்து ராமேஸ்வரம் (162 கி.மீ.,), துாத்துக்குடி (159 கி.மீ.,), திருநெல்வேலி (157 கி.மீ.,), செங்கோட்டை (174 கி.மீ.,), போடி (90 கி.மீ.,), பொள்ளாச்சி (183 கி.மீ.,), திருச்சி (157 கி.மீ.,), மானாமதுரை வழியாக காரைக்குடி (110 கி.மீ.,) என அனைத்து ஊர்களும் 200 கி.மீ., தொலைவிற்குள் வருவதால் 3 மணி நேரத்திற்குள் பயணம் அமையும்.
ஏற்கனவே இவ்வழித்தடங்கள் மின்மயமாக்கப்பட்டுள்ளதால் மதுரையை மையமாக கொண்டு எளிதில் மெமு ரயில்களை இயக்க முடியும். இதன் மூலம் பஸ்சைவிட குறைந்த கட்டணத்தில் விரைவான, பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள முடியும்.
சத்தியபாலன் கூறியதாவது: 2023 டிசம்பரில் மதுரை ரயில்வே கோட்ட மேலாளரிடமும், பின்னர் மத்திய ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணாவிடமும், மெமு ரயில் இயக்க மனு அளித்தோம். மதுரை - துாத்துக்குடி புதிய வழித்தட பணிகளை விரைந்து முடிக்கவும், மதுரை - விழுப்புரம், மதுரை - புனலுார் ரயில்களை ஒரே ரயிலாக மாற்றி இயக்கவும்,மதுரை கோட்டத்தில் மெமு ரயில்களை இயக்கவும், கூடல்நகர் ரயில்வே ஸ்டேஷனில் மெமு ரயில் பணிமனை அமைக்கவும் வலியுறுத்தினோம். அதனை பரிசீலித்து, சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து, நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் உறுதியளித்தார். மெமு ரயில் சேவை வந்தால், தென் மாவட்டங்களில் வளர்ச்சி, வேலை வாய்ப்பு, வியாபாரம் பெருகும்என்றார்.