/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தண்ணீருக்காக கண்ணீர் சிந்தும் பொதுமக்கள்
/
தண்ணீருக்காக கண்ணீர் சிந்தும் பொதுமக்கள்
ADDED : டிச 29, 2024 04:45 AM

கொட்டாம்பட்டி: கச்சிராயன்பட்டியில் ஆழ்துளை கிணறில் தண்ணீர் இருந்தும், உடைந்த தொட்டிக்கு பதிலாக, புதிய தொட்டி அமைக்காததால் மக்கள் குடிநீருக்காக அலைந்து திரியும் அவலம் உள்ளது.
இவ்வூராட்சியில் சங்கர ஆசிரம பகுதியில் வசிக்கும் 200க்கும் மேற்பட்டோருக்கு ஏற்கனவே போர்வெல் அமைத்து குடிநீர் சப்ளை செய்யப்பட்டது. ஓராண்டுக்கு முன் பிளாஸ்டிக் தொட்டி சேதமடைந்ததால், ஊராட்சி நிர்வாகத்தினர் தொட்டியை அப்புறப்படுத்தினர். அத்துடன் சரி... புதிய தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை.
தொட்டி அமைத்திருந்த மேடையிலும் வெடிப்பு ஏற்பட்டுள்ளதுடன், அப்பகுதியில் புதர் மண்டி கிடக்கிறது. எனவே தண்ணீருக்காக பொதுமக்கள் அலைந்து திரியும் அவலம் ஏற்பட்டது. அவ்வழியே செல்லும் வழிப்போக்கர்கள், மோட்டார் சுவிட்சை ஆன்செய்து செல்வதால், குடிநீர் வீணாகி வருகிறது என்பது மக்களின் குற்றச்சாட்டு. எனவே உடனே குடிநீர் தொட்டி அமைக்க வேண்டும்.
அப்பகுதியின் பரமானந்த பாண்டியன் கூறியதாவது: போர்வெல்லில் போதிய அளவு தண்ணீர் உள்ளது. அதனை நிரப்பி வைக்க தொட்டி இல்லாததால் மக்கள் வீணாக அலைந்து திரிகின்றனர். ஒரு கி.மீ., தொலைவில் உள்ள அருவிமலை அடிவாரம் ஊற்று தோண்டி கிடைப்பதைக் குடிநீராக பயன்படுத்துகிறோம். தொட்டி அமைக்க வலியுறுத்தி, கிராமசபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றினோம். ஊராட்சி தலைவியிடமும் பலமுறை மனு கொடுத்தோம். இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. மாவட்ட நிர்வாகமாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
ஊராட்சி தலைவி அமிர்தம் கூறுகையில், ஆழ்துளை கிணறை ஆய்வு செய்து பிளாஸ்டிக் தொட்டி அமைத்து குடிநீர் சப்ளை செய்ய ஏற்பாடு செய்யப்படும் என்றார்.

