ADDED : அக் 26, 2024 05:24 AM
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் பகுதிகளில் சில நாட்களாக பெய்துவரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து, உழவுப் பணிகளை துவக்கி உள்ளனர்.
விவசாயிகள் ஆடி 18 அன்று நெல் நாற்று பாவுவதும், காய்கறிகள் பயிரிடுவதும் வழக்கம். இந்தாண்டு மழை இல்லாததாலும், கண்மாய்கள் வறண்டு கிடப்பதாலும், விவசாயிகள் அப்பணிகளை துவக்கவில்லை.
விவசாயிகள் கூறுகையில், ''கடந்தாண்டு கண்மாய்களில் தண்ணீர் இருந்ததால், அவ்வப்போது லேசான மழை பெய்ததாலும் கோடை உழவு செய்து ஆடி 18ல் பணிகளை துவக்கினோம். இந்தாண்டும் மழை பெய்யும் என்ற நம்பிக்கையில் பலர் கோடை உழவு செய்தனர். ஆடி 18ல் நடவுக்காக விதை நெல்கள், காய்கறிகள் விதைகள் வாங்கி தயாராக இருந்தோம். ஆனால் மழை பெய்யவில்லை.
கிணறுகள், ஆழ்குழாய்களிலும் தண்ணீர் குறைவாக இருந்ததால் நெல் நாற்றுப் பாவுதல், காய்கறிகள் விதைப்பது நடக்கவில்லை. சில நாட்களாக பெய்து வரும் மழை உழவுக்கு உதவியாக உள்ளதால் பலர் அப்பணிகளை துவங்கியுள்ளனர். கிணறுகள், ஆழ்குழாய்களில் தண்ணீர் இருப்பவர்கள் நடவு பணியை துவக்கி உள்ளனர்'' என்றனர்.