ADDED : பிப் 19, 2025 04:47 AM
மதுரை : மதுரையில் சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் சார்பில் அனைத்துத் துறை ஊழியர்களும் நேற்று கறுப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றினர்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தமிழக அரசால் ஓய்வூதியம் தொடர்பாக அமைக்கப்பட்ட அலுவலர் குழுவை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி மாநிலம் முழுவதும் அரசு ஊழியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து எதிர்ப்பை தெரிவித்தபடி பணியாற்றினர்.
மதுரை வணிகவரித்துறை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் குணாளன் தலைமையில், வணிகவரி அலுவலர் சங்க மதுரை கோட்ட தலைவர் மணிகண்டன், அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட பொருளாளர் கல்யாணசுந்தரம், வணிகவரித்துறை சங்க கோட்ட பொறுப்பாளர் பாபு, சரவணன் உள்பட பலர் இதில் பங்கேற்றனர்.
இதுபோல மாநில சுகாதார போக்குவரத்துத்துறை பணிமனையில் மாநில துணைத் தலைவர் அமுதா, அலங்காநல்லுார் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் சின்னப்பொண்ணு ஆகியோர் தலைமையில், அனைத்து துறை அலுவலகங்களிலும் ஊழியர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து இருந்தனர்.