ADDED : அக் 29, 2024 05:36 AM

மதுரை: மதுரை மாநகராட்சி 24வது வார்டு மீனாட்சிபுரம் பகுதிகளில் இரண்டு நாட்களாக தேங்கிய மழைநீரை வெளியேற்ற கோரி அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர்.
இந்த வார்டில் பட்டுக்கோட்டை வீதி உள்ளிட்ட பகுதியில் மழைநீர் தேங்கியுள்ளது. கழிவுநீரும் செல்ல வழியில்லாததால் சுகாதாரக் கேடு பிரச்னை எழுந்தது.
இதை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சியின் பகுதிச் செயலாளர் பாலு தலைமையில் அப்பகுதியினர் போராட்டம் நடத்தினர். அவர்களிடம் கவுன்சிலர் (அ.தி.மு.க.,) மாணிக்கம்,மாநகராட்சி உதவிப் பொறியாளர் பாண்டிகுமார் பேச்சு நடத்தினர்.
அவர்கள் கூறுகையில், இப்பகுதி கழிவுநீர் செல்லுார் 50 அடிரோடு, குலமங்கலம், எல்.ஐ.சி., வழியாக பம்பிங் ஸ்டேஷனுக்கு செல்கிறது. செல்லுார் அய்யனார் கோயில் அருகே குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் அதை பழுதுபார்க்கும் பணிகள் நடக்கிறது.
இதனால் தாழ்வான பகுதியில் உள்ள தெருக்களில் மழை நீர் வெளியேறவில்லை. தற்காலிகமாக நீரை கடத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது என்றனர்.

