ADDED : ஜன 07, 2025 05:13 AM

அவனியாபுரம்: அவனியாபுரத்தில் ஜன.14ல் ஜல்லிக்கட்டு நடக்கிறது. இதில் பங்கேற்கும் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை, சான்றிதழ் வழங்கும் பணி நேற்று துவங்கியது. அவனியாபுரத்தில் கால்நடை உதவி இயக்குனர் டாக்டர் பழனிவேலு தலைமையில் டாக்டர் பாபு காளைகளை பரிசோதித்து தகுதி சான்றிதழ் வழங்கினர்.
காளைகள் நாட்டு இனமாக, 4 பற்கள் இருக்க வேண்டும். குறைந்தபட்சம்132 செ.மீ., மீட்டர் உயரத்துடன் 3 முதல் 8 வயதுக்குள் இருக்க வேண்டும். காணை தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும். திமில் இருக்க வேண்டும். உடலில் காயம் இருக்கக்கூடாது. நோயுற்ற காளைகள், உடல் மெலிந்த காளைகளுக்கு தகுதி இல்லை என்ற விதிகள்அடிப்படையில் பரிசோதனை நடந்தது.
தகுதி சான்றிதழ் அடிப்படையில் காளைகள் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ற அனுமதி சீட்டு வழங்கப்படும்.
ரூ. 300 வசூலிப்பதாக புகார்
பாலமேடு, அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டில்பங்கேற்கும் காளைகளுக்கு தகுதிச் சான்று வழங்க ரூ.300 வசூல் செய்வதாக புகார் எழுந்துஉள்ளது.
கால்நடை மருத்துவமனை டாக்டர்கள் தங்கப்பாண்டி, விவேக் குமார் கூறுகையில், ''யாரிடமும் பணம் வாங்கவில்லை. கடந்த மாதம் வீடுகளுக்கே சென்று காளைகளை பரிசோதித்து படம் எடுத்துஉள்ளோம். அதன்படி சான்று வழங்குகிறோம். புதிய காளைகளுக்கு மருத்துவமனையில் பரிசோதித்து சான்று வழங்கப்படுகிறது'' என்றனர்.