/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை மாநகராட்சி மேயர் தேர்வில் திணறும் ஆளுங்கட்சி அமைச்சர்கள் மோதலால் மார்க்சிஸ்ட்க்கு யோகம்
/
மதுரை மாநகராட்சி மேயர் தேர்வில் திணறும் ஆளுங்கட்சி அமைச்சர்கள் மோதலால் மார்க்சிஸ்ட்க்கு யோகம்
மதுரை மாநகராட்சி மேயர் தேர்வில் திணறும் ஆளுங்கட்சி அமைச்சர்கள் மோதலால் மார்க்சிஸ்ட்க்கு யோகம்
மதுரை மாநகராட்சி மேயர் தேர்வில் திணறும் ஆளுங்கட்சி அமைச்சர்கள் மோதலால் மார்க்சிஸ்ட்க்கு யோகம்
ADDED : அக் 17, 2025 12:06 AM
மதுரை: ஆளுங்கட்சி அமைச்சர்கள் மூர்த்தி, தியாகராஜனுக்குள் ஒற்றுமை இல்லாததால், மதுரைக்கு புதிய மேயரை தேர்வு செய்வதில் அக்கட்சி திணறுகிறது. மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த துணைமேயர் நாகராஜனுக்கு 'பொறுப்பு' மேயராகும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
மதுரை தி.மு.க.,வில் அமைச்சர்கள் மூர்த்தி, தியாகராஜன், நகர் செயலாளர் தளபதி எம்.எல்.ஏ., ஆதரவாளர்கள் என கட்சி நிர்வாகிகள் பிரிந்து கிடக்கின்றனர். அமைச்சர் தியாகராஜனின் ஆதரவாளராக இருந்த இந்திராணி 2022ல் மேயராக பதவியேற்றார். மாநகராட்சி நிர்வாகத்தில் மேயரின் கணவர் பொன்வசந்த் தலையீடு அதிகரித்ததால், தியாகராஜன் கண்டித்தார். ஆனால் தியாகராஜனுக்கு எதிரான அரசியல் போக்கை பொன்வசந்த் கையில் எடுத்ததால் அவரை அமைச்சர் கழற்றிவிட்டார்.
இதற்கிடையே மதுரை மாநகராட்சியில் எழுந்த ரூ.150 கோடி சொத்துவரி முறைகேடு விவகாரத்தில் மேயரின் கணவர் கைது செய்யப்பட்டார். அரசியல் அழுத்தம் காரணமாக மேயர் பதவியையும் இந்திராணி நேற்று முன்தினம் ராஜினாமா செய்தார்.
புதிய மேயரை தேர்வு செய்வதில் அமைச்சர்கள் இருவருக்கும் இடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. அமைச்சர் மூர்த்தி, முன்னாள் மண்டல தலைவர் வாசுகிக்கு ஆதரவு தெரிவிக்கிறார். தியாகராஜன் எதிர்ப்பு தெரிவிக்கிறார். நகர் பகுதியை சேர்ந்த கவுன்சிலர்களை நியமிக்க தியாகராஜன் பரிந்துரைத்தால் மூர்த்தி தரப்பு ஏற்க மறுக்கிறது. மூர்த்தியும், தியாகராஜனும் சேர்ந்து கவுன்சிலர் லட்சிகாஸ்ரீயை சிபாரிசு செய்தால், நகர் செயலாளர் தளபதி முட்டுக்கட்டை போடுகிறார். மூவரும் சேர்ந்து ஒருவரை புதிய மேயராக தேர்வு செய்ய முடியவில்லை. இதனால் கட்சித் தலைமை திணறுகிறது.
மார்க்சிஸ்ட்க்கு யோகம் இன்று துணைமேயர் நாகராஜன் (மார்க்சிஸ்ட் கம்யூ.,) தலைமையில் மாநகராட்சி அவசரக் கூட்டம் நடக்கிறது. இதில் மேயர் இந்திராணியின் ராஜினாமா ஏற்கப்படுகிறது. அமைச்சர்களுக்குள் உடன்பாடு ஏற்பட்டால் புதிய மேயரையும் இக்கூட்டத்திலேயே தேர்வு செய்யலாம்.
ஆனால் கூட்டத்தில் பங்கேற்று மேயர் ராஜினாமாவை ஏற்பதாக கையெழுத்திட்டு மட்டும் வெளியேறுங்கள். ராஜினாமா ஏற்புக்கு பின் துணைமேயர் ஏதாவது மக்கள் பிரச்னை குறித்து பேசி கூட்டத்தை நீட்டித்தால் நம் கவுன்சிலர்கள் உள்ளே இருக்க தேவையில்லை' என ஆளுங்கட்சி சார்பில் தி.மு.க., கவுன்சிலர்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனால் புதிய மேயர் தேர்வு தள்ளிப்போகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
தி.மு.க.,வுக்கு பின்னடைவு இதுகுறித்து தி.மு.க., கவுன்சிலர்கள் கூறியதாவது: மேயர் இல்லாத நிலையில் துணைமேயருக்கு கூடுதல் பொறுப்பு வழங்க வாய்ப்புள்ளது. அப்படியென்றால் 4 கவுன்சிலர்களை வைத்துள்ள மார்க்சிஸ்ட் 69 கவுன்சிலர்களை கொண்ட தி.மு.க.,வை வழிநடத்துமா. அமைச்சர்கள் தங்களுக்குள் உள்ள 'ஈகோ'வால் கட்சியை சேதப்படுத்தலாமா.
ஏற்கனவே கூட்டணியில் இருந்தாலும் பல சமயங்களில் எதிர்த்து 'அரசியல்' செய்யும் மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சிக்கு பொறுப்பு மேயர் பதவி கிடைத்தால் கூட்டணிக்குள் தேவையில்லாத மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே உடன் புதிய மேயரை நியமிக்க தலைமை முன்வர வேண்டும் என்றனர்.