/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மனமகிழ் மன்றங்களுக்கு மது; அரசின் கொள்கை என்ன?
/
மனமகிழ் மன்றங்களுக்கு மது; அரசின் கொள்கை என்ன?
ADDED : செப் 24, 2024 07:09 AM

மதுரை: புதுக்கோட்டை அசோக்நகர் முத்தமிழ் மக்கள் நலச் சங்கம் தலைவர் லட்சுமணன் தாக்கல் செய்த பொதுநல மனு:
ஆலங்குடி ரோடு பொன்நகர் - அசோக்நகர் பகுதியில் ஒரு மனமகிழ் மன்றம் துவக்க ஏற்பாடு நடக்கிறது. அங்கு மது அருந்துவோரால் விபத்து, போக்குவரத்திற்கு இடையூறு, சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும்.
அருகில் பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள் உள்ளன. மனமகிழ் மன்றத்தில் மது விற்பனை செய்ய உரிமம் வழங்கக்கூடாது என கலெக்டர், மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை உதவி கமிஷனருக்கு மனு அனுப்பினோம். உரிமம் வழங்க அரசுக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், சுந்தர் மோகன் அமர்வு:
காளான்கள் போல மனமகிழ் மன்றங்கள், கிளப்கள் அதிகரித்து வருகின்றன. இவற்றில் மது விற்பனைக்கு உரிமம் வழங்குவதில் அரசின் கொள்கை என்ன, இவற்றிற்கான கட்டடங்களில் விதிகள்படி எத்தகைய வசதிகள் இருக்க வேண்டும் என்பது குறித்து, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை செயலர் அக்., 15ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
சம்பந்தப்பட்ட கட்டடத்தில் ஆய்வு செய்து கலெக்டர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வேறு இடத்திற்கு மாற்றப்பட உள்ள மனமகிழ் மன்றத்திற்கு உரிமம் வழங்கக்கூடாது. இவ்வாறு உத்தரவிட்டனர்.