/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கணவனை இழந்த பெண்ணுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு
/
கணவனை இழந்த பெண்ணுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு
ADDED : மே 10, 2024 02:29 AM
நாமக்கல்;கணவனை இழந்த பெண்ணுக்கு, 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கோவை, சர்க்கார் சாம குளத்தில் வசித்து வருபவர் சசிகுமார் மனைவி ஜோதிமணி, 42.
இவரும் இவரது கணவரும், 2019 நவம்பரில் குன்னத்துாரில் உள்ள ஒரு தனியார் வங்கியில் கடன் பெற்றனர். அப்போது வங்கி பரிந்துரையின்படி, தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில், 10,122 ரூபாய் பிரிமியம் செலுத்தி கடனுக்கு இன்சூரன்ஸ் செய்துள்ளனர்.இந்நிலையில் உடல்நிலை சரியில்லாமல் சசிகுமார், 2021 அக்டோபர் மாதத்தில் இறந்துள்ளார். இதனை தெரிவித்து இன்சூரன்ஸ் இழப்பீட்டு தொகை, 9 லட்சம் ரூபாய் வழங்குமாறு ஜோதிமணி இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு விண்ணப்பம் செய்துள்ளார். ஆனால், இறந்தவருக்கு சிறுநீரக கோளாறு மற்றும் ரத்த அழுத்தம் இருந்ததாகவும், அதனை மறைத்து இன்சூரன்ஸ் பெற்று விட்டதாகவும், அதனால் இழப்பீட்டுத் தொகையை வழங்க முடியாது என்று இன்சூரன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.இன்சூரன்ஸ் தொகை ரூ.9 லட்சம் வழங்க வேண்டி, ஜோதிமணி, 2023 ஜனவரி மாதத்தில் கோவை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். அந்த வழக்கு விரைவான விசாரணைக்காக நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.விசாரைணயில், இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி ராமராஜ் தலைமையிலான அமர்வு வழங்கிய தீர்ப்பில், இறந்தவருக்கு சிறுநீரகம் மற்றும் ரத்த அழுத்த பாதிப்பு இருந்ததாக கூறப்படுவதற்கு, இன்சூரன்ஸ் நிறுவனம் எவ்வித சாட்சியங்களையும் முன்வைக்காததால் நிறுவனத்தின் வாதம் ஏற்புடையது அல்ல, மேலும் இன்சூரன்ஸ் இழப்பீடு வழங்காதது சேவை குறைபாடு என்று கூறியுள்ளது.வழக்கு தாக்கல் செய்த பெண்ணுக்கு, அவரது கணவரின் இறப்புக்கான இழப்பீடு தொகை, 9 லட்சம் ரூபாய், சேவை குறைபாட்டால் ஏற்பட்ட சிரமங்களுக்கு இழப்பீடாக ஒரு லட்சம் ரூபாய் சேர்த்து, 10 லட்சம் ரூபாயும், 4 வாரங்களுக்குள் வழக்கு தாக்கல் செய்தவரின் கணவர் இறந்த நாள் முதல் ஆண்டுக்கு, 9 சதவீத வட்டி சேர்த்து வழங்க வேண்டும் என்று தனியார் இன்சூரன்ஸ் நிறுவத்திற்கு மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.