ADDED : செப் 12, 2025 01:35 AM
ப.வேலுார், நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் சுற்றுவட்டாரப் பகுதிகளான எஸ்.வாழவந்தி, பெரியகரசபாளையம், செங்கப்பள்ளி, பரமத்தி, பொத்தனூர், கூடச்சேரி, கபிலர்மலை, சின்னமருதூர், சோழசிராமணி, பெருங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், மரவள்ளிக் கிழங்கு பயிரிடப்பட்டுள்ளது.
இப்பகுதிகளில் விளையும் மரவள்ளி கிழங்குகளை வியாபாரிகள் வாங்கிச் சென்று, புதன்சந்தை, புதுச்சத்திரம், மின்னாம்பள்ளி, மலவேப்பங்கொட்டை, ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிழங்கு ஆலைகளுக்கு அனுப்புவர். ஆலையில் மரவள்ளி கிழங்கில் இருந்து ஜவ்வரிசி, கிழங்கு மாவு தயார் செய்யப்படுகிறது. மேலும், சிப்ஸ் தயார் செய்யவும் வியாபாரிகள் அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனர். கிழங்குகளை வாங்கும் ஆலை உரிமையாளர்கள், அதிலுள்ள மாவுச்சத்து மற்றும் புள்ளிகள் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்கின்றனர்.
கடந்த வாரம் மரவள்ளி கிழங்கு, டன் ஒன்று,6,500 ரூபாய்க்கு விற்றது. தற்போது டன் ஒன்றுக்கு, 1,000 ரூபாய் உயர்ந்து, 7,500 ரூபாய்க்கு விற்கிறது.
கடந்த வாரம் சிப்ஸ் தயாரிக்க பயன்படுத்தும் மரவள்ளி கிழங்கு, டன் ஒன்று,10,000 ரூபாய்க்கு விற்றது. தற்போது டன் ஒன்றுக்கு, 1,000 ரூபாய் வரை உயர்ந்து, 11,000 ரூபாய்க்கு விற்கிறது. மரவள்ளிக்கிழங்கு விலை உயர்வால் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இது குறித்து கிழங்கு வியாபாரிகள் கூறுகையில், 'தற்போது நாமக்கல் மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருவதால் மரவள்ளிக்கிழங்கு அறுவடை செய்வது பாதிப்படைந்துள்ளது. மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்துள்ள, மழை நீர் தேங்காத பகுதியில் மட்டுமே தற்போது அறுவடை செய்து வருவதால் மரவள்ளிக்கிழங்கு விலை கணிசமாக உயர்ந்துள்ளது' என்றனர்.