/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தீபாவளியையொட்டி 2 நாளில் ரூ.200 கோடிக்கு வர்த்தகம் தென் மாநிலங்களில் 2 கோடி கிலோ கறிக்கோழி விற்பனை
/
தீபாவளியையொட்டி 2 நாளில் ரூ.200 கோடிக்கு வர்த்தகம் தென் மாநிலங்களில் 2 கோடி கிலோ கறிக்கோழி விற்பனை
தீபாவளியையொட்டி 2 நாளில் ரூ.200 கோடிக்கு வர்த்தகம் தென் மாநிலங்களில் 2 கோடி கிலோ கறிக்கோழி விற்பனை
தீபாவளியையொட்டி 2 நாளில் ரூ.200 கோடிக்கு வர்த்தகம் தென் மாநிலங்களில் 2 கோடி கிலோ கறிக்கோழி விற்பனை
ADDED : நவ 02, 2024 04:29 AM
நாமக்கல்: தீபாவளி பண்டிகையையொட்டி, தென் மாநிலங்களில் இரண்டு நாட்களில், 2 கோடி கிலோ கறிக்கோழி விற்பனையானது. இதன் மூலம், 200 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.
தமிழகத்தில் பல்லடம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில், 25,000 கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் உள்ளன. இங்கு தினமும், 30 லட்சம் கிலோ கறிக்கோழி உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.
பண்ணை கொள்முதல் விலையை, பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு (பி.சி.சி.,) சார்பில் தினமும் நிர்ணயம் செய்யப்படுகிறது. உற்பத்தி குறைவு, நுகர்வு அதிகரிக்கும் போது, அதன் விலை உயர்வதும், உற்பத்தி அதிகரிக்கும் போது, விலை குறைவதும் வாடிக்கை. இந்நிலையில், கடந்த அக்., 1ல் கிலோ, 107 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட கறிக்கோழி, 10ல், 114 ரூபாய், 15ல், 124 ரூபாய் என, படிப்படியாக உயர்ந்தது. இதையடுத்து, 15ல், 109, 28ல், 111 ரூபாய் என, அதிகரித்தது. நேற்று முன்தினம், 2 ரூபாய் உயர்ந்து, 113 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டது. தீபாவளி பண்டிகையையொட்டி கறிக்கோழி விற்பனை, இரண்டு நாட்களில், அதிகளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணைத்தலைவர் வாங்கிலி சுப்ரமணியம் கூறியதாவது:
கறிக்கோழியை பொறுத்தவரை, ஒரு கிலோ உற்பத்தி செய்ய, 95 ரூபாய் செலவாகிறது. தற்போது, கொள்முதல் விலை, 113 ரூபாய் என, நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கொள்முதல் விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி உயர்ந்துள்ளது. வழக்கமாக வாரந்தோறும், 2.50 கோடி கிலோ கறிக்கோழி விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், தீபாவளி பண்டிகை அன்றும், அதற்கு மறு நாளும், இரண்டு நாளில் மட்டும், இரண்டு கோடி கிலோ கறிக்கோழி விற்பனையானது. இதன் மூலம், 200 கோடி ரூபாய் வர்த்தகம் நடந்துள்ளது. இது, பண்ணையாளர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.