/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சேதமடைந்து வரும் சாலை: டிரைவர்கள் அதிருப்தி
/
சேதமடைந்து வரும் சாலை: டிரைவர்கள் அதிருப்தி
ADDED : ஜூலை 22, 2024 10:49 PM

கூடலுார்;தமிழக- கேரள எல்லையில் சேதமடைந்து வரும் சாலையை சீரமைக்க நடவடிக்கை இல்லாததால் டிரைவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
கூடலுார், கோழிக்கோடு சாலை நாடுகாணியிலிருந்து, கேரளா மாநிலம் மலப்புரம் சாலை பிரிந்து செல்கிறது. இச்சாலை, தமிழக, கேரளா, கர்நாடக இணைக்கும் முக்கிய வழித்தடமாகும். இந்த சாலையை, அரசு பஸ்கள், கனரக வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள் போக்குவரத்துக்கு அதிகம் பயன்படுத்தி வருகின்றன.
மாவட்ட நிர்வாகம் சார்பில், நாடுகாணியில் வாகன நுழைவு வசூல் மையம் அமைத்து, நீலகிரிக்குள் நுழையும், பதிவு எண் கொண்ட வாகனங்களை தவிர்த்து, பிற பதிவு எண் கொண்ட வாகனங்களுக்கு, நுழைவு கட்டணம் வசூல் செய்து வருகின்றனர். ஆனால், இச்சாலை பல இடங்களில் சேதம் அடைந்து, சீரமைக்கப்படாமல் உள்ளது.
தற்போது, பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில், சாலை தொடர்ந்து சேதமடைந்து வருவதால், வாகனங்கள் இயக்க சிரமம் ஏற்பட்டுள்ளது. டிரைவர்கள் சுற்றுலா பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
டிரைவர்கள் கூறுகையில், 'கேரளாவில் இருந்து இவ்வழியாக நீலகிரிக்குள் வரும் வாகனங்களுக்கும் நுழைவு கட்டணம் வசூல் செய்து வருகின்றனர். ஆனால், தொடர்ந்து சேதமடைந்து வரும் சாலையை சீரமைக்க நடவடிக்கை இல்லை. இதனால், வாகனங்கள் இயக்க சிரமம் ஏற்படுவதுடன், இரவில் வாகன விபத்துக்கள் ஏற்படும் ஆபத்து உள்ளது.
வாகனங்களுக்கு கட்டாயம் நுழைவு வரி வசூல் செய்வது போன்று, சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.