/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பவானி ஆற்று நீரை சேமித்தால் புழு உருவாகிறது
/
பவானி ஆற்று நீரை சேமித்தால் புழு உருவாகிறது
ADDED : மார் 13, 2024 10:19 PM

மேட்டுப்பாளையம் : பவானி ஆற்றில் எடுத்து விநியோகம் செய்யும் குடிநீரை, நான்கு நாட்களுக்கு மேல் இருப்பு வைத்தால், புழுக்கள் உருவாகிறது. இந்த தண்ணீரை குடிக்கும் பலருக்கு உடல் நலம் பாதிக்கிறது என, ஊராட்சித் தலைவர்கள் தெரிவித்தனர்.
சிறுமுகை அருகே மூளையூரில், பவானி ஆற்றில் கிணறு அமைக்கப்பட்டு உள்ளது. இதிலிருந்து, ஆறு ஊராட்சிகளின் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு தினமும், ஒரு கோடியே, 30 லட்சம் லிட்டர் தண்ணீரை உறிஞ்சி எடுத்து, சம்பரவள்ளியில் அமைத்துள்ள சுத்திகரிப்பு நிலையத்தில், சுத்தம் செய்யப்படுகிறது.
இந்த தண்ணீரை சின்னக்கள்ளிப்பட்டி, முடுதுறை, இரும்பறை, இலுப்பநத்தம், பெள்ளேபாளையம், ஜடையம்பாளையம் ஆகிய ஆறு ஊராட்சிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. இந்த தண்ணீர் பவானி ஆற்றில் நீர்வரத்து குறைந்ததால், போதிய அளவு தண்ணீரை உறிஞ்ச முடிவதில்லை.
இதனால் ஊராட்சிகளுக்கு தேவையான குடிநீர் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என, ஊராட்சித் தலைவர்கள் தெரிவித்தனர். இது குறித்து இக்குடிநீர் திட்டத்தால் பயனடையும், ஊராட்சி தலைவர்கள் கூறியதாவது:
சிறுமுகை பேரூராட்சி கழிவுநீர், ஏழு எருமை பள்ளத்தில் வரும் கழிவு நீர், இரண்டும் கலந்து, விஸ்கோஸ் ஆலையின் அருகே, பவானி ஆற்றில் கலக்கிறது. அதன் அருகே ஊராட்சிகளின் குடிநீர் திட்டத்திற்கு நீர் உறிஞ்சும் கிணறு அமைக்கப்பட்டுள்ளது.
ஆற்றில் தண்ணீர் அதிகமாக ஓடிய போது, எவ்வித பாதிப்பும் தெரியவில்லை. தற்போது ஆற்றில் நீர்வரத்து முற்றிலும் குறைந்து, ஏழு எருமை பள்ளத்தில் வரும் கழிவு நீர், பவானி ஆற்றில் ஓடுகிறது.
தற்போது இந்த தண்ணீரை எடுத்து சுத்தம் செய்யப்படுகிறது. இதனால் வீடுகளில் நான்கு நாட்களுக்கு மேல், தண்ணீரை சேமித்து வைத்தால், புழுக்கள் உருவாகிறது. இந்த தண்ணீரை குடிக்கும் மக்கள் உடல் நலம் பாதிக்கின்றனர். கடந்த வாரம் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், ஆற்றையும், தண்ணீரையும் ஆய்வு செய்தனர். தண்ணீர் தரம் இல்லாத வகையில் உள்ளது என, பொதுமக்கள் கூறியதை அடுத்து, திருப்பூர் குடிநீர் திட்டத்தில் இருந்து, குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர். ஆனால் அதற்கான நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை.
ஆற்றில் தண்ணீர் குறைவாக வருவதால், ஊராட்சிகளுக்கு வழங்கப்படும் குடிநீரின் அளவும் குறைந்துள்ளது. ஒவ்வொரு ஊராட்சியிலும் குறைந்தது, 5 நாள், அதிகபட்சம், 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்வதால், குடிநீர் பற்றாக்குறையால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
மேலும், ஆற்றில் தண்ணீர் எடுக்கும் இடத்தில் தேங்கியுள்ள குப்பைகளையும், சேறு, சகதிகளையும் சுத்தம் செய்ய வேண்டும். மாவட்ட நிர்வாகம் உடனடியாக இப்பகுதியை ஆய்வு செய்து, திருப்பூர் குடிநீர் திட்டத்தில் இருந்து, குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ஊராட்சி தலைவர்கள் கூறினர்.

