வனங்களில் வீசும் குப்பையால் பெரும் பாதிப்பு: விதிமீறலில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை அவசியம்
வனங்களில் வீசும் குப்பையால் பெரும் பாதிப்பு: விதிமீறலில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை அவசியம்
UPDATED : ஜூலை 20, 2026 08:43 PM
ADDED : ஜூலை 20, 2026 08:03 PM

குன்னுார்: குன்னுாரில் வனங்களில் குப்பை கொட்டுவதை தடுக்க முடியாத சூழ்நிலை நீடிப்பதால் வன விலங்குகள் பாதிக்கப்படுகின்றன.
குன்னுார் லேம்ஸ்ராக் சாலை சி.எம்.எஸ்., உள்ளிட்ட வனப்பகுதிகளில், குப்பைகள் கொட்டப்படுவதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. குறிப்பாக, குப்பையில் உள்ள பாட்டில்கள், பிளாஸ்டிக் மற்றும் மருத்துவ கழிவுகள், துருப்பிடித்த இரும்பு வகைகளால், வன உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
இப்பகுதிகளில் சிறுத்தை, கரடி, காட்டெருமை, காட்டுப்பன்றி, குரங்கு உள்ளிட்டவைகள் அவற்றை உட்கொள்ள அதிகளவில் வருகின்றன. இவற்றை சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் துாய்யை படுத்தினாலும், மீண்டும் குப்பை கொட்டுவது தொடர்கிறது.
'நோபல் மிஷன் அண்ட் விஷன்' தன்னார்வ அமைப்பு தலைவர் ஜமீலா ஜலால் கூறுகையில்,
''குன்னுார் லேம்ஸ்ராக் சி.எம்.எஸ்., உட்பட சாலையோர வனப்பகுதிகளில், குப்பை கழிவுகளை சிலர் மூட்டையாகவும் கொட்டுகின்றனர். இங்கு பிளாஸ்டிக் மற்றும் துணிகளில் கட்டி வீசும் உணவு கழிவுகள், வனவிலங்குகள் உட்கொண்டு உயிரிழக்க காரணமாக அமைகின்றன. இதுகுறித்து ஏற்கனவே பலமுறை புகார்கள் கொடுத்தும் தீர்வு இல்லை,'' என்றார்.
எனவே, வனப்பகுதிகளில் குப்பைகளை கொட்டுவோர் மீது, மாவட்ட நிர்வாகம், வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
