/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கோடை மழை தொடர்ந்தால் வறட்சி நீங்கும்
/
கோடை மழை தொடர்ந்தால் வறட்சி நீங்கும்
ADDED : மார் 19, 2025 08:09 PM

கூடலுார்; 'முதுமலையில், கோடை மழை தொடர்ந்து பெய்தால், மட்டுமே வனப்பகுதி பசுமைக்கு மாறி வனத்தீ அபாயம் நீங்கும், 'என, வனத்துறையினர் தெரிவித்தனர்.
முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி மற்றும் கூடலுார் கோட்டம் வன உயிரினங்களின் முக்கிய வாழ்விடமாக உள்ளது. 'கடந்த ஆண்டு இங்கு, எதிர் பார்க்கிறதை விட அதிகம் பருவமழை பெய்தால், கோடையில் வன விலங்கு களுக்கு உணவு, குடிநீர் தட்டுப்பாடு இருக்காது,' என, வனத்துறையினர் எதிர்பார்த்தனர்.
ஆனால், நடப்பு ஆண்டு கோடை மழை ஏமாற்றி வந்ததுடன், இரவு மற்றும் அதிகாலையில் ஏற்பட்ட பனி பொழிவு காரணமாக, வனப்பகுதியில் வறட்சி யின் தாக்கமும் அதிகரித்துள்ளது. முதுமலை மற்றும் மசினகுடி வனப்பகுதிகளில், தாவரங்கள் கருகி வருவதுடன், மரங்களில் இலைகள் காய்ந்து உதிர்ந்து காட்சியளிக்கிறது.
வனவிலங்குகளுக்கு உணவு, குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு, வனவிலங்குகள் இடம் பெயர்ந்துள்ளன.
வறட்சியான பகுதிகளில் வனத்துறையினர் வாகனங்களின் மூலம் தண்ணீர் எடுத்து சென்று, சிமென்ட் தொட்டிகளில் ஊற்றி, வனவிலங்குகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகின்றனர்.
இந்நிலையில், முதுமலை, கூடலுார் பகுதி யில் கடந்த சில நாட்களாக மிதமான மழை பரவலாக பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து, குளிர்ச்சியான காலநிலை ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள், வனத்துறையினரும் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
வனத்துறையினர் கூறுகையில், 'நடப்பு ஆண்டு, ஜன., முதல் கோடை மழை ஏமாற்றியதால், வனப்பகுதியில் வறட்சியின் தாக்கம் அதிகரித்து வனவிலங்குகளுக்கு உணவு, குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. வனத்தீ அபாயமும் உள்ளது.
இந்நிலையில், சில நாட்கள் மழை பெய்ததன் மூலம், குளிர்ச்சியான காலநிலை ஏற்பட்டுள்ளது. கோடை மழை, தொடர்ந்தால் வறட்சியின் தாக்கம் மற்றும் வனத்தீ அபாயம் நீங்க வனப்பகுதி பசுமைக்கு மாற வாய்ப்புள்ளது,' என்றனர்.