/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஆன்லைனில் ரூ.1.09 கோடி மோசடி செய்தவர் கைது
/
ஆன்லைனில் ரூ.1.09 கோடி மோசடி செய்தவர் கைது
ADDED : நவ 04, 2025 08:48 PM
பாலக்காடு: வீட்டில் இருந்தபடியே, 'ஆன்லைன்' வாயிலாக 'ஷேர் டிரேடிங்' செய்து பணம் சம்பாதிக்கலாம் என, ஆசை வார்த்தை கூறி, 1.09 கோடி ரூபாய் மோசடி செய்தவரை, போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம், பாலக்காடு யாக்கரை பகுதியை சேர்ந்த ரஞ்சித், பாலக்காடு சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார். அதில், 'ஆன்லைன்' வாயிலாக 'ஷேர் டிரேடிங்' செய்து பணம் சம்பாதிக்கலாம் என கூறி, 1.09 கோடி ரூபாய் பணம் பெற்று மோசடி செய்து விட்டனர் என, தெரிவித்தார்.
மாவட்ட எஸ்.பி., அஜித்குமார் அறிவுரையின்படி, டி.எஸ்.பி., பிரசாத், சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் சசிகுமார் தலைமையில் நடத்திய விசாரணையில், கோழிக்கோடு மாவட்டம் வடகரை பகுதியை சேர்ந்த ரியாஸ், 48, என்பவர், பண மோசடி செய்ததாக கூறி நேற்று கைது செய்தனர்.
இன்ஸ்பெக்டர் சசிகுமார் கூறியதாவது:
கடந்த, செப்., மாதம் இந்த மோசடி நடந்துள்ளது. 'டெலிகிராம்' ஆப் வாயிலாக, புகார்தாரரை தொடர்பு கொண்டு, வீட்டிலிருந்த படியே 'ஷேர் டிரேடிங் ' செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.
அதை நம்பி, 'டெபாசிட்' தொகையாக, 1.09 கோடி ரூபாயை, ரியாஸ் என்பவர் பெற்று, மோசடி செய்துள்ளார். ஆன்லைன் வாயிலாக பணத்தை பெற்று, இந்த பணத்தில், பெரிய தொகையை அவரது வடகரை பகுதியில் உள்ள மற்றொரு வங்கிக் கணக்குக்கு பரிமாற்றம் செய்தது தெரிந்தது. இதையடுத்து, நேற்று வடகரை பகுதியில் அவர் கைது செய்யப்பட்டார்.
இவ்வாறு, கூறினார்.

