/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஆன்லைனில் ரூ.60.82 லட்சம் மோசடி செய்தவர் கைது
/
ஆன்லைனில் ரூ.60.82 லட்சம் மோசடி செய்தவர் கைது
ADDED : நவ 05, 2025 08:51 PM
பாலக்காடு: வீட்டில் இருந்தபடியே, 'ஆன்லைன்' வாயிலாக 'ஷேர் டிரேடிங்' செய்து பணம் சம்பாதிக்கலாம் என, ஆசை வார்த்தை கூறி, 60.82 லட்சம் ரூபாய் மோசடி செய்தவரை, சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், பட்டாம்பி பகுதியை சேர்ந்த அபீபா, பாலக்காடு சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார்.
அதில், 'ஆன்லைன்' வாயிலாக 'ஷேர் டிரேடிங்' செய்து பணம் சம்பாதிக்கலாம் என கூறி, ரூ.60.82 லட்சம் ரூபாய் பணத்தை இழந்ததாக தெரிவித்தார்.
மாவட்ட எஸ்.பி., அஜித்குமார் அறிவுரையின்படி, டி.எஸ்.பி., பிரசாத், சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் சசிக்குமார் தலைமையில் நடத்திய விசாரணைக்கு பின், மலப்புரம் மாவட்டம் எடப்பாள் பகுதியை சேர்ந்த அப்துல் கரீம், 51, என்பவரை நேற்று கைது செய்தனர்.
இன்ஸ்பெக்டர் சசிக்குமார் கூறியதாவது:
கடந்த, 2025 செப்., மாதம் இந்த மோசடி நடந்துள்ளது. 'வாட்ஸ் ஆப்' வாயிலாக, புகார்தாரரை தொடர்பு கொண்டு, வீட்டிலிருந்த படியே 'ஷேர் டிரேடிங்' செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.
அதை நம்பி, 'டெபாசிட்' தொகையாக, 60.82 லட்சம் ரூபாயை, அப்துல் கரீம் என்பவர் 'ஆன்லைன்' வாயிலாக பெற்று, மோசடி செய்துள்ளார்.
அந்த பணத்தில், பெரிய தொகையை அவரது எடப்பாள் பகுதியில் உள்ள மற்றொரு வங்கிக் கணக்குக்கு பரிமாற்றம் செய்துள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து, நேற்று எடப்பாள் பகுதியில் அவர் கைது செய்யப்பட்டார்.
இவ்வாறு, அவர் கூறினார்.

