ADDED : செப் 08, 2026 05:21 PM
ஊட்டி: மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் உள்ள நடைமுறை சிக்கல்களை தீர்க்க கோரி அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில், ஊட்டியில் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் நடந்தது.
‘மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் உள்ள நடைமுறை சிக்கல்களை தீர்க்க வேண்டும்,’ என்பன உட்பபட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில், ஊட்டியில் கலெக்டர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் குமார் தலைமை வகித்தார்.
மின் ஊழியர் ஓய்வூதியர் நல சங்க மாநில துணை தலைவர் மைக்கேல், மாவட்ட செயலாளர் நாகராஜன், மாவட்ட துணை தலைவர் கருணாகரன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
கோரிக்கைகள் குறித்து நிர்வாகிகள் கூறுகையில்,‘ ஓய்வூதியர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் உள்ள நடைமுறை சிக்கல்கள், ஒப்புதல், மறுப்புகள் மற்றும் தாமதங்களை உடனடியாக தவிர்க்க வேண்டும்; விடுபட்ட மற்றும் புதிய ஓய்வூதியர்கள் அனைவருக்கும் மருத்துவ காப்பீட்டு அட்டையை எவ்வித தடையுமின்றி முறையாக வழங்க வேண்டும்.
பட்டியலிடப்பட்ட அனைத்து மருத்துவமனைகளிலும் முழுமையான பணமில்லா சிகிச்சையை தடையின்றி உறுதி செய்ய வேண்டும்.
அவசர சிகிச்சைகளுக்கு அரசு அங்கீகரிக்காத மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றாலும் அதற்கான செலவு தொகையை முழுமையாக அரசே வழங்க வேண்டும்,’ என்றனர்.
ஆர்ப்பாட்டத்தில், ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர் நல சங்க மாவட்ட தலைவர் சண்முகம், வட்ட பொருளாளர் சந்திரமோகன், வட்ட தலைவர் ராமன் குட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் பெரியய்யா நன்றி கூறினார்.
