தீர்வு காணாத பட்சத்தில் பணி புறக்கணிப்பு தொடரும் டாஸ்மாக் பணியாளர்கள் முடிவு
தீர்வு காணாத பட்சத்தில் பணி புறக்கணிப்பு தொடரும் டாஸ்மாக் பணியாளர்கள் முடிவு
ADDED : ஆக 16, 2026 05:00 PM
ஊட்டி: -
ஊட்டி ஒய்.பி.ஏ., சங்க கட்டடத்தில், டாஸ்மாக் பணியாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
நீலகிரி மாவட்டத்தில், கடந்த 23 ஆண்டுகளாக, 48 டாஸ்மாக் கடைகளில், 600 பணியாளர்கள் பணி புரிந்து வரும் நிலையில், பணி நிரந்தரம் மற்றும் அடிப்படை பிரச்னைகளை தீர்க்க, தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
தீர்வு கிடைக்காத நிலையில், கடந்த, 14ம் தேதி முதல் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஊட்டி ஒய்.பி.ஏ., சங்க கட்டடத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டத்தில், வேலைவாய்ப்பு அலுவலகம் வாயிலாக, டாஸ்மாக் பணியில் சேர்ந்து, 23 ஆண்டுகளாக பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு இடையே பணி செய்து வரும் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்; கடைகளில் காலி அட்டைப்பெட்டிகளை பாதுகாத்தல், மது பாட்டில்களை தனித்தனியாக பிரித்து வைக்கவும், கழிவறை வசதி உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும்;
விற்பனை பணிக்காக பணியமர்த்தப்பட்ட பணியாளர்களை, கூடுதலாக காலி பாட்டில் திரும்ப பெறுதல் போன்ற பணி சுமையால், பணியாளர்கள் மன உளைச்சல் அடைவதை தவிர்க்க வேண்டும்;
கடை விற்பனையை முடித்து, 10:00 மணிக்கு மேல் கணக்குகளை சரி பார்க்க, 11:30 மணியாகிறது. இரவு, 8:30 மணிக்கு மேல், எந்த பொது போக்குவரத்து வசதியும் இல்லாத நிலையில், வன விலங்குகளின் அச்சத்திற்கு இடையே, வீட்டிற்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால், வாகனங்களை வாடகைக்கு அமர்த்த வேண்டிய நிலை உள்ளதால், சம்பள பண விரயமாகிறது. எனவே, பணி நேரத்தை, இரவு, 8:00 மணியாக குறைக்க வேண்டும்;
அரசு பிரச்னைக்கு தீர்வு காணாத பட்சத்தில், தொடர்ந்து பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவது என, கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
இதில், மேற்பார்வையாளர்கள், ராஜகோபால், கிருஷ்ணப்பன் மற்றும் விற்பனையாளர் ராமகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.
