/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ரூ.18.50 லட்சம் மோசடி திருச்சூர் வாலிபர் கைது
/
ரூ.18.50 லட்சம் மோசடி திருச்சூர் வாலிபர் கைது
ADDED : டிச 26, 2025 06:51 AM
பாலக்காடு: வீட்டில் இருந்தபடியே, ஆன்லைன் வாயிலாக 'ஷேர் டிரேடிங்' செய்து பணம் சம்பாதிக்கலாம் என, ஆசை வார்த்தை கூறி, 18.50 லட்சம் ரூபாய் மோசடி செய்தவரை, போலீசார் கைது செய்தனர்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், ஸ்ரீகிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர், பாலக்காடு சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுத்தார்.
அதில், ஆன்லைன் வாயிலாக 'ஷேர் டிரேடிங்' செய்து பணம் சம்பாதிக்கலாம் என கூறி, 18.50 லட்சம் ரூபாய் பணம் பெற்று மோசடி செய்ததாக தெரிவித்தார்.
மாவட்ட எஸ்.பி., அஜித்குமார் அறிவுரையின்படி, டி.எஸ்.பி., பிரசாத், சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் சசிகுமார் தலைமையில் நடத்திய விசாரணையில், திருச்சூர் மாவட்டம் இரிஞ்சாலகுடா பகுதியை சேர்ந்த ஷெல்வின் ஷாஜு, 22, என்பவர், பண மோசடி செய்ததாக நேற்று கைது செய்தனர்.
இன்ஸ்பெக்டர் சசிகுமார் கூறியதாவது:
கடந்த, அக்., மாதம் இந்த மோசடி நடந்துள்ளது.
டெலிகிராம் ஆப் வாயிலாக, புகார்தாரரை தொடர்பு கொண்டு, வீட்டிலிருந்த படியே 'ஷேர் டிரேடிங்' செய்து அதிக பணம் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறியுள்ளனர். அதை நம்பி, டெபாசிட் தொகையாக, 18.50 லட்சம் ரூபாயை, ஷெல்வின் ஷாஜு, என்பவர் பெற்று, மோசடி செய்துள்ளார்.
ஆன்லைன் வாயிலாக பணத்தை பெற்று, இந்த பணத்தில், பெரிய தொகையை அவரது மற்றொரு வங்கிக் கணக்குக்கு பரிமாற்றம் செய்தது தெரிந்தது.
இதையடுத்து, நேற்று இரிஞ்சாலகுடா பகுதியில் அவர் கைது செய்யப்பட்டார். இவர் மீது தெலுங்கானா, கர்நாடகா, புதுடில்லி, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் பண மோசடி வழக்குகள் உள்ளதும் விசாரணையில் தெரிந்தது.
இவ்வாறு, கூறினார்.

