/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
உத்தரகோசமங்கையில் ஆருத்ரா தரிசன விழா; சந்தனக்காப்பு களைந்த மரகத நடராஜருக்கு அபிஷேகம்: ஏழு மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
/
உத்தரகோசமங்கையில் ஆருத்ரா தரிசன விழா; சந்தனக்காப்பு களைந்த மரகத நடராஜருக்கு அபிஷேகம்: ஏழு மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
உத்தரகோசமங்கையில் ஆருத்ரா தரிசன விழா; சந்தனக்காப்பு களைந்த மரகத நடராஜருக்கு அபிஷேகம்: ஏழு மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
உத்தரகோசமங்கையில் ஆருத்ரா தரிசன விழா; சந்தனக்காப்பு களைந்த மரகத நடராஜருக்கு அபிஷேகம்: ஏழு மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
UPDATED : ஜன 03, 2026 07:39 AM
ADDED : ஜன 03, 2026 07:09 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயில் ஆருத்ரா தரிசன விழாவில் மரகத நடராஜருக்கு சந்தனக்காப்பு களையப்பட்டு சிறப்பு அபிேஷகங்கள் நடந்தன. கொளுத்தும் வெயிலில் ஏழு மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். இன்று காலை ( ஜன.,3) ஆருத்ரா தரிசனம் நடக்கிறது.
ஆதி சிவன் கோயில் என்றழைக்கப்படும் உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி கோயிலில் டிச., 25 காப்பு கட்டுதலுடன் ஆருத்ரா தரிசன விழா துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலை 8:30 மணிக்கு மரகத நடராஜருக்கு சந்தனம் படி களைதல் நடந்தது. அதன் பிறகு மரகத நடராஜருக்கு பால், பன்னீர், சந்தனம், தைலக்காப்பு, தயிர் உள்ளிட்ட 32 வகையான அபிேஷகங்கள் நடந்தன.
இரவு 10:00 மணிக்கு கூத்தர் பெருமாள் கல்தேர் மண்டபத்தில் எழுந்தருளினார். நேற்று காலை 6:00 முதல் இன்று காலை 6:00 மணி வரை (24மணிநேரம்) தொடர் பரதநாட்டியம் நிகழ்ச்சி நடந்தது. நேற்று இரவு விடிய விடிய நடராஜருக்கு அபிேஷகம் நடந்தது.
பக்தர்கள் பொது தரிசனம் வழியில் 7 மணி நேரம், ரூ.10 டிக்கெட் வரிசையில் நின்றவர்கள் 5 மணி நேரம், ரூ.100, ரூ.250 டிக்கெட் எடுத்தவர்கள் 3 மணி நேரம் காத்திருந்து சந்தனம் களைந்த மரகத நடராஜரை தரிசித்தனர்.
இன்று (ஜன., 3) அதிகாலை 4:00 மணிக்கு நடராஜ பெருமானுக்கு ஆருத்ரா மகா அபிேஷகம் துவங்குகிறது. முடிவில் மரகத நடராஜருக்கு புதிய சந்தனகாப்பிட்டு ஆருத்ரா தரிசனம் நடக்கிறது. காலை 10:00 மணிக்கு கூத்தர் பெருமாள் வீதியுலா, மாலை 5:00 மணிக்கு பஞ்ச மூர்த்திகளுக்கு அபிேஷகம், இரவு 8:00 மணிக்கு மாணிக்கவாசகர் சுவாமிக்கு காட்சியளித்தல், பிறகு ரிஷப வாகனகத்தில் சுவாமி புறப்பாடு நடக்கிறது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

