ADDED : அக் 06, 2025 04:48 AM
ராமநாதபுரம் : அஞ்சல் துறையின் சேவைகள் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் தேசிய அஞ்சல் வாரம் கொண்டாடப்படுகிறது. நிகழாண்டு அக்.6 முதல் அக்.10 வரை அஞ்சல் வார விழா நடைபெறவுள்ளது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கருப்பொருளில் கொண்டாடப்படவுள்ளது.
முதல் நாளான இன்று (அக்.6) அஞ்சல் சேவையில் தொழில்நுட்பம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
அக். 7 நிதி சேர்க்கை தினம், அக்.8 ல் தபால் தலை சேகரிப்பு தினம், அக்.9 ல் உலக அஞ்சல் தினம், அக்.10 வாடிக்கையாளர் தினமாக கொண்டாடப்படவுள்ளது.
இந்த நாட்களில் மாவட்டத்தில் உள்ள 31 அஞ்சலகங்களில் ஆதார் சேவை, ஆயுள் காப்பீடு திட்டம், பிரீமியம் கணக்கு துவங்குவதற்கான சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆதார் எண்ணுடன் அலைபேசி எண்ணை இணைப்பதற்கான சிறப்பு முகாம் கிராமங்களில் நடத்தப்படும் என ராமநாதபுரம் கோட்ட கண்காணிப்பாளர் தீத்தாரப்பன் தெரிவித்துள்ளார்.