/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
எஸ்.ஐ., தேர்வு: 'ஆப்சென்ட்' 1331
/
எஸ்.ஐ., தேர்வு: 'ஆப்சென்ட்' 1331
ADDED : டிச 22, 2025 05:27 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் 4523 பேர் எஸ்.ஐ., தேர்வுக்கு விண்ணப்பித்த நிலையில் 1331 பேர் தேர்வு எழுத வரவில்லை.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில், 1352 போலீஸ் எஸ்.ஐ.,க்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். அதற்கான எழுத்துத் தேர்வு ராமநாதபுரத்தில் 3526 ஆண்கள், 997 பெண்கள் என 4523 பேர் தேர்வு எழுத ஹால்டிக்கெட் வழங்கப்பட்டது. ராமநாதபுரத்தில் 3 தேர்வு மையங்களும், கீழக்கரையில் இரு தேர்வு மையங்களும் ஒதுக்கப்பட்டது.
இதனால் ராமேஸ்வரம், தொண்டி, கமுதி உள்ளிட்ட தொலைதுார பகுதிகளில் இருந்து தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் அதிகாலை புறப்பட்டு ராமநாதபுரத்திற்கு வந்தனர்.
ராமநாதபுரம் செய்யது அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பெண்களுக்கான தேர்வு மையம் ஒதுக்கப்பட்டது. இதனால் சில பெண்கள் அருகில் உள்ள செய்யது அம்மாள் மேல்நிலைப் பள்ளிக்கு சென்று ஏமாந்தனர்.
கடைசி நேரத்தில் அதுபோல் வந்த பெண் தேர்வரை போலீஸ் எஸ்.ஐ., பைக்கில் அழைத்து சென்று மெட்ரிக் பள்ளியில் இறக்கி விட்டார்.
டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கு வட்டார அளவில் தேர்வு மையங்கள் ஒதுக்குவது போல் எஸ்.ஐ., தேர்வுக்கு கூடுதல் தேர்வு மையங்கள் ஒதுக்க வேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை வைத்தனர். தேர்வுக்கு விண்ணப்பித்ததில் 3192 பேர் மட்டும் தேர்வு எழுத வந்தனர். 1331 பேர் தேர்வு எழுதவில்லை.
ராமநாதபுரம் எஸ்.பி., சந்தீஷ் கூறியதாவது: போலீஸ் எஸ்.ஐ., தேர்வில் முறைகேடுகளை தவிர்ப்பதற்காக 20 பேருக்கு ஒரு கேமரா என 230 கேமராக்கள் மூலம் தேர்வு கண்காணிக்கப்பட்டது. முறைகேட்டில் ஈடுப்பட்டது கண்டறியப்பட்டால் எப்.ஐ.ஆர்.,பதிவு செய்யப்பட்டு வரும் காலங்களில் தேர்வுகளில் பங்கேற்க தடை விதிக்கப்படும் என்றார்.

