/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சரக்கு வாகனத்தை வழிமறித்து மாணவர்கள் ஆபத்து பயணம்
/
சரக்கு வாகனத்தை வழிமறித்து மாணவர்கள் ஆபத்து பயணம்
சரக்கு வாகனத்தை வழிமறித்து மாணவர்கள் ஆபத்து பயணம்
சரக்கு வாகனத்தை வழிமறித்து மாணவர்கள் ஆபத்து பயணம்
ADDED : டிச 09, 2025 05:57 AM

பஸ் இயக்க பெற்றோர் கோரிக்கை
முதுகுளத்துார்: முதுகுளத்துார் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு மாணவர்களை ஏற்றி செல்வதற்காக பள்ளி நேரத்தில் இயக்கப்பட்டு வந்த அரசு பஸ் இயக்கப்படாத நிலையில் மாணவர்கள் சரக்கு வாகனத்தில் ஆபத்தான பயணம் செய்வதால் மீண்டும் பஸ் இயக்க வேண்டும் என்று பெற்றோர் கோரிக்கை விடுத்தனர்.
முதுகுளத்துார் அரசு மேல்நிலைப்பள்ளியில் காக்கூர், ஏனாதி, கீழக்காஞ்சிரங்குளம், இளஞ்செம்பூர், சித்திரங்குடி, கீழச்சாக்குளம் உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 300க்கு அதிகமான மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளி பஸ் ஸ்டாண்டில் இருந்து 2 கி.மீ.,ல் உள்ளது. இதனால் மாணவர்களின் நலன் கருதி காலை, மாலையில் பள்ளி நேரத்தில் அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. தற்போது இந்த பஸ் இயக்கப்படவில்லை.
இதனால் மாணவர்கள் நடந்து செல்வதால் குறிப்பிட்ட நேரத்திற்குள் வீட்டிற்கு செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். பஸ்சுக்கு செல்வதற்காக மாணவர்கள் சரக்கு வாகனங்களை வழிமறித்து ஆபத்தான பயணம் செய்கின்றனர். இதுகுறித்து பெற்றோர் கூறியதாவது:
அரசு மேல்நிலைப்பள்ளிக்கு பஸ் ஸ்டாண்டில் இருந்து பள்ளிக்கு மாணவர்கள் நடந்து செல்லும் நிலை இருந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு பஸ் இயக்கப்பட்டது. பின் அந்த அரசு பஸ் நிறுத்தப்பட்டது. மாணவர்கள் 2 கி.மீ., நடந்தே செல்கின்றனர். இதனால் ஏதாவது அசம்பாவிதம் ஏற்படும் நிலை உள்ளது.
பள்ளி முடிந்து கிராமப் பகுதிகளுக்கு செல்வதற்காக குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் இயக்கப்படும் பஸ்களை பிடிப்பதற்காக வேறு வழியின்றி மாணவர்கள் இவ்வழியில் வரும் சரக்கு வாகனம், டூவீலரில் லிப்ட் கேட்டு செல்லும் நிலை உள்ளது. எனவே மாணவர்களின் நலம் கருதி மீண்டும் பள்ளி நேரத்தில் அரசு பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

