/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மிளகாய் சாகுபடி குறித்த தொழில்நுட்ப கருத்தரங்கம்
/
மிளகாய் சாகுபடி குறித்த தொழில்நுட்ப கருத்தரங்கம்
ADDED : பிப் 19, 2024 06:04 AM
கமுதி : கமுதியில் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் வேளாண் அறிவியல் நிலையம், தமிழ்நாடு வேளாண் பல்கலை இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான முண்டு மிளகாய் சாகுபடி மற்றும் சந்தைப்படுத்துதல் பற்றிய தொழில் நுட்பக் கருத்தரங்கம் நடந்தது.
வேளாண் தொழில்நுட்ப பயன்பாட்டு ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் சேக்.என்.மீரா தலைமை வகித்தார். அவர் கூறியதாவது:
ராமநாதபுரத்தில் விவசாயிகளின் வாழ்வில் முண்டு மிளகாய் ஒரு பயிராக மட்டுமல்லாமல்நம் விவசாயிகளின் மகிழ்ச்சியின் குறியீடாகவும் மற்றும் செழிப்பின் அடையாளமாகவும் ஒரு தனி இடத்தை பிடித்துள்ளது. அதன் சாகுபடி தலைமுறை தலைமுறையாக நமது சமூகத்தின் பாரம்பரியங்கள் மற்றும் வாழ்வாதாரங்களில் ஆழமாகப் பதிந்துள்ளது.
முண்டு மிளகாய் சாகுபடி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஒரு தனித்துவமான அடையாளத்தை வழங்கியுள்ளது.முண்டு மிளகாய்க்கு கிடைத்த புவிசார் குறியீடு இதை உறுதி செய்துள்ளது என்றார்.
விவசாய சாதனையாளருக்கான விருது கமுதி அருகே கோரைபள்ளத்தை சேர்ந்த இயற்கை விவசாயிராமருக்கு வழங்கப்பட்டது. கலந்து கொண்ட விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள் வழங்கப்பட்டது.
சமுதாய அறிவியல் கல்லுாரி முதல்வர் காஞ்சனா, ராமநாதபுரம் வேளாண் அறிவியல் நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் வள்ளல் கண்ணன் உட்பட வேளாண்த்துறை அதிகாரிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

