ADDED : மே 11, 2024 06:50 AM
சென்னை : வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, நீலகிரி, கோவை உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை:
தெற்கு கேரளா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் மழை பெய்து வருகிறது.
இன்று, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில், கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த மழை வரும், 14ம் தேதி வரை தொடரலாம்.
தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், இன்று இடி, மின்னலுடன் மட்டுமின்றி, மணிக்கு 40 கி.மீ., வேகத்தில் பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யவும் வாய்ப்புள்ளது. அதேநேரம், தமிழகத்தின் உள்மாவட்டங்களில் பகல் நேர வெப்பநிலை இயல்பைவிட, 3 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகரிக்கும்.
இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
10 நகரங்களில் வெயில் சதம்
நேற்று மாலை நிலவரப்படி, ஈரோடு, வேலுாரில், அதிகபட்சமாக, 104 டிகிரி பாரன்ஹீட்; 40 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது.
கரூர் பரமத்தி, மதுரை விமான நிலையம், நாமக்கல், சேலம், தஞ்சை, திருப்பத்துார், திருச்சி, திருத்தணி நகரங்களில், 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் அதாவது, 38 டிகிரி செல்ஷியசுக்கு மேல் வெயில் வாட்டியது.