ADDED : அக் 24, 2025 01:33 AM
சேலம், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து, மாநகராட்சி, ஊரக வளர்ச்சித்துறைகள், எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல் வினியோகிஸ்தர்கள், தொலை தொடர்பு நிறுவனங்களுடனான ஆலோசனை கூட்டம், சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்தது.
அதில் கலெக்டர் பிருந்தாதேவி பேசியதாவது:
உள்ளாட்சி அமைப்புகள், வானிலை மைய அறிவிப்புகளின்படி, மின் துண்டிப்பு பிரச்னைகளை சமாளிக்க, உயர்நிலை நீர்தேக்க தொட்டிகளை நிரப்பி வைக்க, மழைக்காலங்களில் குடியிருப்பு பகுதிகளில் தேங்கும் மழைநீரை உடனுக்குடன் அகற்ற, வெள்ள நீர் தடையின்றி செல்ல, கழிவுநீர் பாதைகளை சீர் செய்திட, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சாலைகளில் உள்ள பள்ளங்களை சரிசெய்தல், தொட்டிகளை அவ்வப்போது சுத்தம் செய்தல், குடிநீர் ஆதாரங்களில் முறையாக குளோரின் சேர்த்தல், டீசல், பெட்ரோல் தட்டுப்பாடு இல்லாமல், கையிருப்பு குறையாமல் வைத்திருப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
சேலம் மாவட்டத்தில் பருவ மழையால் பாதிப்பு ஏற்பட்டால், '1077' என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலோ, கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் கட்டுப்பாட்டு அறை எண்: 0427 - 2452202 என்ற எண்ணிலோ, 24 மணி நேரமும் மக்கள் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
டி.ஆர்.ஓ., ரவிக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.
ஆத்துார் நகராட்சி கமிஷனர் சையது முஸ்தபா கமால் அறிக்கை:
வடகிழக்கு பருவமழை வெள்ள பாதிப்பு தொடர்பான புகார்களுக்கு, ஆத்துார் நகராட்சி அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, 04282 -- 299374 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

