ADDED : ஏப் 10, 2024 06:53 AM
சேலம் : சேலம், குரங்குச்சாவடி சாஸ்தா நகர், கே.எஸ்., அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் சுரேஷ்பாபு. சேலம் மாநகர், மாவட்ட பா.ஜ., தலைவரான இவர், லோக்சபா தேர்தலில் வாக்காளர்களுக்கு வினியோகிக்க, வீட்டில் பணத்தை பதுக்கியுள்ளதாக தகவல் கிடைத்தது.
இதனால் வருமான வரித்துறை கூடுதல் உதவி இயக்குனர் வேணுகோபால் தலைமையில், 5 பேர் குழுவினர், நேற்று மாலை, 5:15 மணிக்கு சுரேஷ்பாபு வீட்டில் சோதனையில் ஈடுபட்டனர். அவர்களுடன் பறக்கும்படை அலுவலர் மங்கை உடனிருந்தார். ஒரு மணி நேர சோதனையில் எதுவும் சிக்கவில்லை. சுரேஷ்பாபுவிடம் விசாரணை நடத்திவிட்டு அதிகாரிகள் திரும்பி சென்றனர்.
அதன்பிறகு பாதுகாப்புக்கு வந்த போலீஸ் உதவி கமிஷனர் நிலவழகன் தலைமையில் போலீசார், மீண்டும் சோதனை நடத்தப்போவதாக கூறி வீட்டுக்குள் நுழைய முயன்றனர். அவர்களை, பா.ஜ.,வினர் உள்ளே விடாமல் தடுத்தனர்.
வருமான வரித்துறை சோதனை முடிந்தும், நீங்கள் எதற்கு தனியே சோதனை நடத்த வேண்டும் என, கேள்வி கேட்டு வாக்குவாதம் செய்தனர். இதனிடையே, பா.ம.க.,வை சேர்ந்த, எம்.எல்.ஏ., அருள் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் திரண்டுவிட்டனர். எனினும் போலீசார், 5 மணி நேரமாக, அதே இடத்தில் முகாமிட்ட நிலையில், இரவு, 10:00 மணிக்கு சோதனையில் ஈடுபட்டனர். மேற்கு தாசில்தார் மாதேஸ்வரன் முன்னிலையில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இரவு 10:45 மணி வரை சோதனை நடத்தியும் எதுவும் சிக்கவில்லை.
இதுகுறித்து சுரேஷ்பாபு கூறுகையில், ''நீதிமன்ற உத்தரவு உள்பட எந்த அனுமதியின்றி உள் நோக்கத்துடன் சோதனை நடத்த முற்படுவது கண்டிக்கத்தக்கது. எந்த அடிப்படை முகாமிந்திரமின்றி போலீசார் செயல்படுவதை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம்,'' என்றார்.

