/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வாரிசு அரசியலுக்கு 2026ல் முற்றுப்புள்ளி அ.தி.மு.க., இ.பி.எஸ்., கணிப்பு
/
வாரிசு அரசியலுக்கு 2026ல் முற்றுப்புள்ளி அ.தி.மு.க., இ.பி.எஸ்., கணிப்பு
வாரிசு அரசியலுக்கு 2026ல் முற்றுப்புள்ளி அ.தி.மு.க., இ.பி.எஸ்., கணிப்பு
வாரிசு அரசியலுக்கு 2026ல் முற்றுப்புள்ளி அ.தி.மு.க., இ.பி.எஸ்., கணிப்பு
ADDED : நவ 04, 2024 04:32 AM
இடைப்பாடி: ''வரும், 2026 சட்டசபை தேர்தல், வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக அமையும்,'' என்று, அ.தி.மு.க., பொது செயலர், இ.பி.எஸ்., கணித்துள்ளார்.
சேலம் மாவட்டம் இடைப்பாடி நகர அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், வீரப்பம்பாளையத்தில் நேற்று நடந்தது. அதில் பொது செயலர் இ.பி.எஸ்., பேசியதாவது:தி.மு.க.,வில் ஒரு குடும்பத்தினர் மட்டும் அதிகாரத்தில் உள்ளனர். குடும்ப அரசியலை மக்கள் அனுமதிக்க மாட்டார்கள். எனவே வரும், 2026 சட்டசபை தேர்தல் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக அமையும்.
அவசர சிகிச்சையில் உள்ள நோயாளிக்கு 'வென்டிலேட்டர்' வைப்பது போல, சேலத்துக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. மூன்றரை ஆண்டுகளாக மக்களை சந்திக்காமல், அமைச்சர் பதவி வந்ததும், மக்கள் சந்திப்பு கூட்டம் நடத்துகின்றனர்.
அ.தி.மு.க., ஆட்சியில் இடைப்பாடி தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை என்று, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், குறை கூறுகிறார். ஆனால் மக்கள் சந்திப்பு கூட்டங்களில், அ.தி.மு.க., ஆட்சியின்போது வழங்கப்பட்ட முதியோர் உதவித்தொகை, தாலிக்கு தங்கம், திருமண உதவித்தொகை கேட்டு தான் மக்கள் மனு கொடுத்துள்ளனர்.
ஆட்சிக்கு வந்த மூன்றரை ஆண்டுகளில், 3.50 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ள, தி.மு.க., அரசு, சேலத்துக்கு எந்த புது திட்டத்தையும் கொண்டு வரவில்லை. தமிழகத்தில் முன்பு வெளிமாநிலங்களில் இருந்துதான், போதைப்பொருட்களை விற்பனைக்கு கொண்டு வருவர். தற்போது இங்கேயே தயாரிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
விஜய் எப்படி விமர்சிப்பார்?
தொடர்ந்து இடைப்பாடியில், இ.பி.எஸ்., அளித்த பேட்டி:
அ.தி.மு.க., குறித்து, த.வெ.க., தலைவர் விஜய் பேசாததற்கு மற்றவர்கள் ஏன் துடிக்கிறார்கள் என, தெரியவில்லை. 30 ஆண்டு கால அ.தி.மு.க., ஆட்சியில் நிறைய திட்டங்களை மக்களுக்கு செய்துள்ளோம். அப்படி இருக்கும்போது அ.தி.மு.க.,வை எப்படி விஜய் விமர்சிப்பார்? இவ்வாறு அவர் பேசினார்.
'பொறுத்திருங்கள்'
'தி.மு.க., எதிர்க்கட்சியாக இருந்தபோது, 'விடியல்' பயணம் மேற்கொண்டு ஸ்டாலின் ஆட்சியை பிடித்தார். அப்படி ஏதும் திட்டம் உள்ளதா' என, நிருபர்கள் கேட்டதற்கு, 'பொறுத்திருந்து பாருங்கள். தற்போது தெரிவிக்க முடியாது' என, இ.பி.எஸ்., பதிலளித்தார்.