ADDED : மே 19, 2024 02:34 AM
வீரபாண்டி: வீரபாண்டி வட்டாரத்தில் கடத்துார் அக்ரஹாரம், புத்துார் அக்ரஹாரம், உத்தமசோழபுரம், அக்கரபாளையம், சேனைப்பாளையம் ஆகிய கிராமங்களில், நடப்பாண்டு அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் ஒரு பகுதியாக கடத்துாரில் நேற்று, மண் மாதிரி சேகரிப்பு முகாம், பயிற்சி அளிக்கப்பட்டது.
அதை தொடங்கி வைத்து வட்டார வேளாண் உதவி இயக்குனர் பிரியங்கா(பொ) பேசியதாவது:
அனைத்து கிராம வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட உள்ள கிராமங்களில் தலா, 100 மண் மாதிரிகள் எடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மண் மாதிரி சேகரித்து ஆய்வு முடிவை தெரிந்து கொண்டால், மண்ணில் தேவையற்ற உரங்களை இடுவது தவிர்க்கப்படுவதோடு மண் வளம் காப்பாற்றப்படும். மேலும் தேவையற்ற செலவு மிச்சமாகும்.
விவசாயிகள் அனைவரும் மண் மாதிரிகள் சேகரித்து மண் வள அட்டை பெற்றுக்கொள்ள வேண்டும். இதன் மூலம் மண்ணுக்கு தேவையான கனிமங்கள், சத்துகள் தேவையான அளவில் கிடைக்கும். இயற்கை உரங்களை பயன்படுத்தி மண் வளத்தை காப்பதோடு கூடுதல் மகசூல் பெறலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
துணை வேளாண் அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, விவசாயிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.

