ADDED : அக் 23, 2024 07:14 AM
வாழப்பாடி: வாழப்பாடி அடுத்த வெள்ளாளகுண்டம், காமராஜபுரத்தை சேர்ந்தவர் தங்கவேல், 67. இவருக்கு சொந்தமான காளை மாட்டை, அதே பகுதியில் உள்ள அவரது விவசாய நிலத்தில் தென்னை மரத்தில் கட்டி வைத்திருந்தார். நேற்று மதியம், 3:30 மணிக்கு பெய்த கனமழையின்போது மின்னல் தாக்கியதில் காளை மாடு உயிரிழந்தது. வெள்ளாளகுண்டம் வி.ஏ.ஓ., விஜயராஜ், சம்பவ இடத்தில் விசாரித்தார். கால்நடை மருத்துவர்கள், இறந்த மாட்டை உடற்கூராய்வு செய்தனர். 13 ஆண்டுகளுக்கு மேலாக வளர்த்து வந்த மாடு இறந்ததால் தங்கவேலு சோகம் அடைந்தார்.
மின்சாதனங்கள் சேதம்
ஆத்துார், நரசிங்கபுரம் நகர் பகுதிகளில், 6,000க்கும் மேற்பட்ட அரசு கேபிள் 'டிவி' இணைப்புகள் உள்ளன. நேற்று முன்தினம் இரவு இடி, மின்னலுடன் கன மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கி, கேபிள், 'டிவி'களுக்கு சிக்னல் அதிகப்படுத்தி கொடுக்க பயன்படுத்தும் 'பூஸ்டிங் ஆம்ப்ளிபயர்' சில இடங்களில் சேதமடைந்தன. இதனால் இரவு முழுதும் சிக்னல் வராததால், கேபிள் 'டிவி'கள் ஓடவில்லை. நேற்று கேபிள் ஆப்பரேட்டர்கள் ஆய்வு செய்தபோது, 10க்கும் மேற்பட்ட பூஸ்டிங் ஆம்ப்ளிபயர்கள் பழுதானது தெரிந்தது. பழுதானவைகளை அகற்றிவிட்டு, புதிதாக மாற்றும் பணியில் ஆப்பரேட்டர்கள் ஈடுபட்டனர்.
அதேபோல் தேவூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் நேற்று இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது மயிலம்பட்டியில் உள்ள தென்னை மரத்தில் மின்னல் தாக்கி, அதன் கீற்றுகள் எரிந்தன.