/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சேலத்தில் கடத்தப்பட்ட குழந்தை நாமக்கலில் மீட்பு 2வது மனைவிக்காக கடத்திய கொத்தனார் கைது
/
சேலத்தில் கடத்தப்பட்ட குழந்தை நாமக்கலில் மீட்பு 2வது மனைவிக்காக கடத்திய கொத்தனார் கைது
சேலத்தில் கடத்தப்பட்ட குழந்தை நாமக்கலில் மீட்பு 2வது மனைவிக்காக கடத்திய கொத்தனார் கைது
சேலத்தில் கடத்தப்பட்ட குழந்தை நாமக்கலில் மீட்பு 2வது மனைவிக்காக கடத்திய கொத்தனார் கைது
ADDED : செப் 11, 2025 03:45 AM
சேலம்:சேலத்தில் கடத்தப்பட்ட பெண் குழந்தை, நாமக்கல்லில் மீட்கப்பட்டது. கடத்திய கொத்தனாரை கைது செய்த போலீசார், அவரது, 2வது மனைவிக்கு பிறந்த குழந்தைகள் இறந்துவிட்டதால், இந்த கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது.
சேலம், குகை, பஞ்சந்தாங்கி ஏரியை சேந்தவர் மதுரை, 22. இவரது மனைவி பிரியா, 20. இவர்களுக்கு, 9 மாதமேயான, ரித்திகா என்ற பெண் குழந்தை உள்ளது. தம்பதி, கூடை பின்னி விற்கின்றனர்.
எங்கு தொழில் செய்கின்றனரோ அங்கேயே தங்குவர். அதன்படி, அழகாபுரம் போலீஸ் ஸ்டேஷன் எதிரே, மேம்பால பகுதியை ஒட்டி, இந்த தம்பதி, கடந்த 5ம் தேதி இரவு அங்கேயே துாங்கினர்.
அதிகாலையில் பிரியா விழித்தபோது, குழந்தையை காணவில்லை. அதிர்ச்சி அடைந்த தம்பதி, பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. மதுரை புகார்படி, அழகாபுரம் போலீசார், 'சிசிடிவி' காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஒருவர் குழந்தையை துாக்கிச்செல்வது பதிவாகி இருந்தது.
அந்த நபர் குறித்து விசாரித்ததில், கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த ரமேஷ், 33, என்பது தெரிந்தது. அவரை போலீசார் தேடினர். அந்த நபர், குழந்தையுடன் நாமக்கல் மாவட்டம், துறையூர் பிரதான சாலை, அண்ணா நகரில் இருப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
உடனே அழகாபுரம் போலீசார், நாமக்கல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள், உரிய இடத்துக்கு சென்று குழந்தையை மீட்டனர். தொடர்ந்து ரமேஷை பிடித்து, சேலம் அழகாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
பின், அழகாபுரம் போலீசார், நாமக்கல் சென்று ரமேஷை கைது செய்து, குழந்தையை மீட்டனர். தொடர்ந்து ரமேஷிடம் விசாரித்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:
ரமேஷின் முதல் மனைவி விக்னேஷ்வரி. இரண்டாம் மனைவி நித்யா. தற்போது, 2வது மனைவியுடன், ரமேஷ் வசிக்கிறார். நித்யாவுக்கு இரு குழந்தைகள் பிறந்து இறந்து விட்டன. கடந்த 5ம் தேதி, புது பஸ் ஸ்டாண்ட் சென்ற ரமேஷ், மீண்டும் அஸ்தம்பட்டிக்கு வந்து கொண்டிருந்தார்.
அப்போது அழகாபுரத்தில், ஒரு தாய் துாங்கிக் கொண்டிருந்த நிலையில், குழந்தை அருகே தவழ்ந்து கொண்டிருந்தது. இதை பார்த்த ரமேஷ், குழந்தையை துாக்கி சென்று, அந்த குழந்தையை நித்யாவிடம் கொடுத்து வளர்க்க கூறினார்.
மேலும் சந்தேகம் வந்துவிடக்கூடாது என்பதற்காக, சேலத்தில் இருந்து நாமக்கல் சென்றதும் தெரிந்தது. மீட்கப்பட்ட குழந்தை, அதன் தாய் பிரியாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.