ADDED : மார் 07, 2024 02:23 AM
மேட்டூர், மேட்டூர் நகராட்சி, மேற்கு பிரதான சாலை, மின்வாரிய பணிமனையில் தொடங்கி, 3 கி.மீ.,ல் உள்ள மாதையன்குட்டையில் நிறைவடைகிறது. இதில் அரசு மருத்துவமனை முதல் புனிதமரியன்னை பள்ளி வரை, 1 கி.மீ., நெடுஞ்சாலை, 100 அடி அகலம் கொண்டது. தற்போது, 25 அடி அகலம் மட்டும் தார்ச்சாலையும், இருபுறமும் தலா, 7 அடி அகலம் காலி நிலமும் உள்ளது. அதன் இருபுறமும், 61 அடி நீளம், ஏராளமான கடைகள் வைத்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன.
அதை அகற்றி சாலையை விரிவாக்கம் செய்ய, மேட்டூரை சேர்ந்த தனிநபர், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றம், ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது. இதனால் இரு நாட்களாக மேட்டூர் நகரமைப்பு அலுவலர் புவனேஸ்வரி, நகரமைப்பு ஆய்வாளர் சிவகுமார் முன்னிலையில் ஊழியர்கள், சாலை இருபுறமும் தலா, 5 மீ., நீளம் அளந்து பெயின்ட் மூலம் குறியீடு செய்தனர். 'அளவீடு செய்த ஆக்கிரமிப்புகளை வியாபாரிகள், முன்வந்து அகற்ற வேண்டும்.
இல்லையெனில் நகராட்சி சார்பில் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்' என, அலுவலர்கள் தெரிவித்தனர்.

