ADDED : ஜூன் 04, 2024 03:55 AM
இஸ்ரேலை கண்டித்து
மா.கம்யூ., ஆர்ப்பாட்டம்
சேலம்: பாலஸ்தீனத்தின் மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேலை கண்டித்து, சேலம் கோட்டை மைதானத்தில், மார்க்சிஸ்ட் கம்யூ., சார்பில், நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலர் சண்முகராஜா தலைமை வகித்தார். அமெரிக்க ஆதரவுடன், பாலஸ்தீன குழந்தைகளையும், மக்களையும் கொன்று குவித்து வரும் இஸ்லேரை கண்டித்து கோஷமிட்டனர். மாநகர் காங்., தலைவர் பாஸ்கர், பொருளாளர் ராஜகணபதி, சி.பி.எம்., மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமமூர்த்தி, வடக்கு மாநகர் செயலர் பிரவின்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆசிரியரிடம் ரூ.10 லட்சம் மோசடி
சேலம்: கெங்கவல்லி அருகே ஆணையம்
பட்டியை சேர்ந்த, 37 வயது அரசு பள்ளி ஆசிரியர் மொபைல் எண்ணுக்கு, ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என, மர்ம நபர் தகவல் அனுப்பியுள்ளார். இதை நம்பி அவர் கடந்த மே மாதம், 10 லட்சத்து, 70 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்து ஏமாந்துள்ளார். இது தொடர்பாக, சேலம் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் ஆசிரியர் அளித்த புகார்படி, பணம் மோசடி செய்த நபர்களை தேடி வருகின்றனர்.
நீரோடையை துார்வார கோரிக்கை
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டியில், சேலம் மாநகராட்சிக்கு சொந்தமாக, 2,137 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது. ஏரியின் உபரி நீரை நம்பி, 20க்கும் மேற்பட்ட துணை ஏரிகள் உள்ளது. அந்த வகையில், மூக்குத்திபாளையம் ஏரியிலிருந்து, பசுவநத்தம்பட்டி ஏரிக்கு செல்லும் நீரோடை இருந்தது. சரியாக பராமரிக்காததால், இருந்த இடம் தெரியாமல் மண் மூடி கிடக்கிறது. அந்த நீரோடையை துார்வார வேண்டும் என, சந்தியூர், மூக்குத்திபாளையம்,பசுவநத்தம்பட்டி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.