/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மரநாய்களால் தேங்காய் சேதம்: புலம்பும் விவசாயிகள்
/
மரநாய்களால் தேங்காய் சேதம்: புலம்பும் விவசாயிகள்
ADDED : ஜூன் 27, 2024 11:37 PM

திருப்புவனம் : திருப்புவனம் பகுதி தென்னை மரங்களில் மர நாய்கள் புகுந்து இளநீர் காய்களை சேதப்படுத்தி வருவதாக விவசாயிகள் புலம்புகின்றனர்.
திருப்புவனம், திருப்பாச்சேத்தி உள்ளிட்ட பகுதிகளில் நெல், வாழைகளுக்கு அடுத்தபடியாக தென்னை விவசாயம் செய்யப்படுகிறது. விவசாயிகள் பலரும் பம்ப்செட் மூலம் கிணற்று பாசனத்தை வைத்து பல ஆண்டுகளாக தென்னை மரங்களை வளர்த்து வருகின்றனர். சமீபகாலமாக தேங்காய் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கோடை வெயில் காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் காடுகளில் உள்ள பள்ளங்கள், நீர் நிலைகள் வற்றியதால் தண்ணீர் தேடி தென்னந் தோப்புகளில் குடிபுகும் மர நாய்கள் தேங்காய்களில் துளையிட்டு தண்ணீரை உறிஞ்சி விடுகின்றன.
மரநாய்கள் ஒரு மரத்தில் ஏறினால் அதில் உள்ள அனைத்து தேங்காய்களிலும் தண்ணீரை உறிஞ்சிய பின் தான் அடுத்த மரத்திற்கு செல்லும், இதுபோல அணில், காட்டு எலி உள்ளிட்டவைகளும் தேங்காய்களில் துளையிட்டு தண்ணீரை உறிஞ்சி விடுகின்றன. இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.
ஹக்கீம் ராஜா விவசாயி கூறுகையில்: மர நாய்கள் இரவு நேரத்தில் தான் மரத்தில் ஏறி பதுங்கி விடுகின்றன. தேங்காய்கள் அனைத்தையும் சேதப்படுத்திய பின் தான் இறங்குகின்றன. மரநாய் மேலே இருப்பதை கண்டறியவே முடியாது, மழை பெய்தால் மட்டுமே இதற்கு ஓரளவு தீர்வு காண முடியும், என்றனர்.

