/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புவனத்தில் தொடரும் மணல் திருட்டு: கட்டாந்தரையாக மாறி வரும் வைகை ஆறு
/
திருப்புவனத்தில் தொடரும் மணல் திருட்டு: கட்டாந்தரையாக மாறி வரும் வைகை ஆறு
திருப்புவனத்தில் தொடரும் மணல் திருட்டு: கட்டாந்தரையாக மாறி வரும் வைகை ஆறு
திருப்புவனத்தில் தொடரும் மணல் திருட்டு: கட்டாந்தரையாக மாறி வரும் வைகை ஆறு
ADDED : ஏப் 08, 2024 11:57 PM

திருப்புவனம்: திருப்புவனம் வைகை ஆறு தொடர் மணல் திருட்டு காரணமாக கட்டாந்தரையாக மாறி வருகிறது. திருப்புவனம் வைகை ஆற்றை நம்பி மாரநாடு, கானுார், பழையனுார், திருப்புவனம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கண்மாய்கள் பாசன வசதி பெறுகின்றன. வைகை ஆற்றின் இருபுறமும் ஏராளமான தென்னந்தோப்பு உள்ளன. வைகை ஆற்றில் நீர்வரத்து காலங்கள் தவிர மற்ற காலங்களில் ஆழ்துளை கிணறுகள், திறந்த வெளி கிணறுகள் மூலம் விவசாய பணிகள் நடைபெறும்.
திருப்புவனம் வட்டாரத்தில் நெல் 4 ஆயிரம் எக்டேரில் நடைபெறுகிறது. இதுதவிர ஒன்றரை லட்சம் தென்னை மரங்கள், இரண்டாயிரம் ஏக்கரில் கரும்பு உள்ளிட்டவை விளைவிக்கப்படுகின்றன. மேலும் வைகை ஆற்றில்இருந்து கட்டனுார், அருப்புக்கோட்டை, திருப்புவனம் ஆகிய பகுதிகளுக்கு கூட்டு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன.
வைகை ஆற்றில் தொடர்ச்சியாக பல இடங்களில் மணல் திருட்டு நடந்த வண்ணம் உள்ளன. ஏற்கனவே மணல் திருட்டு காரணமாக செல்லப்பனேந்தல் விலக்கு உள்ளிட்ட பகுதிகளில் வைகை ஆறு கட்டாந்தரையாக மாறிவிட்டது. மற்ற இடங்களில் ஓரளவிற்கு மணல் இருப்பதால் சுற்றுவட்டார பகுதிகளில் நீரோட்டம் இன்னமும் உயிர்ப்புடன் உள்ளது.
சமீப காலமாக ஆண்களும் பெண்களும் கூட்டம் கூட்டமாக தலைச்சுமையாக மணல் திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர். வைகை ஆற்றில் இருந்து துாரத்தை பொறுத்து ஒரு மூடை மணல் 75 ரூபாயில் இருந்து 100 ரூபாய் வரை விற்பனை செய்கின்றனர்.
சென்ட்ரிங், தூண்கள் அமைக்க உள்ளிட்டவற்றிற்கு எம் சாண்ட் பயன்படுத்தினால் கட்டடத்தின் உறுதித்தன்மை கேள்விக்குறியாக இருப்பதாக கூறி கட்டட உரிமையாளர்கள் வைகை ஆற்று மணலை வாங்கி பயன்படுத்துகின்றனர். இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்டு பல இடங்களில் மணல் திருட்டு நடந்த வண்ணம் உள்ளது.
தேர்தல் நேரம் என்பதால் அதிகாரிகள் அதில் முழு கவனத்தையும் செலுத்துவதால் 24 மணி நேரமும் மணல் திருடப்பட்டு வருகிறது. கூட்டு குடிநீர் திட்ட கிணறு அருகே நீர்மட்டம் உயர்வதற்காக உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் மணலை குவித்து வைத்துள்ளனர். இதனை அப்பகுதியில் பலரும் சாக்கு மூடையில் திருடி செல்கின்றனர்.
மேலும் மதுரை நகருக்கு ஆட்டோ உள்ளிட்ட சரக்கு வாகனங்களில் மணல் மூடை கொண்டு செல்லப்படுகிறது. மணல் திருட்டு காரணமாக பல இடங்களில் வைகை ஆறு கட்டாந்தரையாக மாறி வருகிறது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் வெகு பாதாளத்திற்கு செல்ல வாய்ப்புள்ளது.
எனவே மாவட்ட நிர்வாகம் மணல் திருட்டை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

