/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பட்டா இடம் எங்கே கேள்வி கேட்டு முற்றுகை
/
பட்டா இடம் எங்கே கேள்வி கேட்டு முற்றுகை
ADDED : நவ 08, 2024 04:26 AM

காரைக்குடி: காரைக்குடியில் வேடன் நகரில் வசிக்கும் மக்களுக்கு அரசு விழாவில்பட்டா வழங்கியும் இடத்தை அளந்து கொடுக்காததால் நேற்று தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
காரைக்குடி வேடன்நகரில் 100க்கும் மேற்பட்ட நரிக்குறவ இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். 30 ஆண்டுகளுக்கும் மேலாக இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, காரைக்குடியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் நடந்த இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சியில் 106 பேருக்கு பட்டா வழங்கப்பட்டது. அவர்களுக்கான இடம் வழங்கப்படவில்லை.
இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானதை தொடர்ந்து, தாசில்தார் ராஜா தலைமையில் வருவாய் துறையினர் சம்பந்தப்பட்டவர்களுக்கு இடங்களை ஒப்படைக்க திருவேலங்குடி பைபாஸ் அருகே ஒதுக்கப்பட்ட இடத்தில், கல் ஊன்றும் பணியில் ஈடுபட்டனர். இந்தப் பணியும் பாதியில் நிறுத்தப்பட்டது.
தங்களுக்கு கொடுக்கப்பட்ட இடத்தை, தங்களுக்கு வழங்கக் கூடாது என சிலர் எதிர்ப்பு தெரிவிப்பதை அறிந்த நரிக்குறவர் இன மக்கள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு காரைக்குடி தாலுகா அலுவலகத்தில் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் தாங்கள் குடியிருக்கும் இடத்தில் கண்மாய் தண்ணீர் புகுந்ததாகவும், தங்களுக்கு வழங்கப்பட்ட இடத்தை வழங்கவில்லை என்று கூறி நேற்று ஏராளமானோர் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
தாசில்தார் ராஜா கூறுகையில், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை அளவீடு செய்து, கல் ஊன்றும் பணி நடந்தது. மீதமுள்ள இடங்களும் விரைவில் அளவீடு செய்யப்பட்டு ஒப்படைக்கப்படும். அவ்விடத்தை ஒப்படைப்பதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். போலீசார் துணையுடன், உரிய இடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.