/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தொழில் முனைவோருக்கு கடன் கைகொடுக்கும் மத்திய, மாநில அரசு திட்டம்
/
தொழில் முனைவோருக்கு கடன் கைகொடுக்கும் மத்திய, மாநில அரசு திட்டம்
தொழில் முனைவோருக்கு கடன் கைகொடுக்கும் மத்திய, மாநில அரசு திட்டம்
தொழில் முனைவோருக்கு கடன் கைகொடுக்கும் மத்திய, மாநில அரசு திட்டம்
ADDED : அக் 01, 2025 08:59 AM
மாவட்ட அளவில் கடந்த 4 ஆண்டுகளில் 834 தொழில் முனைவோர் மத்திய, மாநில அரசு திட்டத்தின் கீழ் தொழில் துவங்க ரூ.66.08 கோடி வரை மாவட்ட தொழில் மையம் மூலம் கடனுதவி பெற்று தொழில் செய்து வருகின்றனர்.
மத்திய, மாநில அரசு தொழில் முனைவோரை உருவாக்கும் நோக்கில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை துவக்குவதற்காக பல்வேறு திட்டங்கள் மூலம் மானியத்துடன் கூடிய கடனுதவியை வழங்கி வருகிறது.
வேலை உருவாக்கும் திட்டம் சிவகங்கை மாவட்ட தொழில் மையம் மூலம் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் (யு.ஒய்.இ.ஜி.பி.,) திட்டத்தின் கீழ் 299 பயனாளிகளுக்கு ரூ.14.18 கோடி திட்ட தொகையில், ரூ.13.71 கோடி வரை கடன் வழங்கியுள்ளனர். இதற்காக ரூ.3.46 கோடி வரை மானியம் அளித்துள்ளனர்.
புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின் கீழ் (நீட்ஸ்) 72 பயனாளிகளுக்கு ரூ.35.31 கோடி திட்ட தொகையில் ரூ.21.03 கோடி வரை கடன் வழங்கியுள்ளனர். இதற்காக ரூ.4.59 கோடி வரை மானியம் விடுவிக்கப்பட்டுள்ளது.
அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் (ஏ.ஏ.பி.சி.எஸ்.,) 53 தொழில் முனைவோருக்கு ரூ.13.78 கோடி திட்ட தொகையில், கடனாக ரூ.7.86 கோடி வரை விடுவித்துள்ளனர். இதற்காக மானியமாக மட்டுமே ரூ.3.72 கோடி வரை விடுவித்துள்ளனர். நாட்டில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் நோக்கத்தில், பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் (பி.எம்.இ.ஜி.பி.,) கீழ் 189 தொழில் முனைவோருக்கு ரூ.17.76 கோடி திட்ட தொகையில், ரூ.15.37 கோடி கடன் தொகை விடுவிக்கப்பட்டு, மானியமாக ரூ.5.21 கோடி வரை பெற்றுள்ளனர்.
உணவு பதப்படுத்தும் நிறுவனங்களை முறைப்படுத்தும் விதமாக இத்தொழிலில் ஈடுபட்டு வருவோருக்கு பிரதமரின் குறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள் முறைப்படுத்துதல் திட்டத்தின் கீழ் 22 பயனாளிகளுக்கு ரூ.9.92 கோடி கடன் திட்ட தொகை நிர்ணயம் செய்ததில், ரூ.8.11 கோடி கடன் தொகை விடுவிக்கப்பட்டுள்ளன.
இதற்காக தொழில் முனைவோர் ரூ.2.83 கோடி வரை மானியமாக பெற்றுள்ளனர். மாவட்ட அளவில் தொழில் முனைவோர்களை உருவாக்கும் நோக்கில் மத்திய, மாநில அரசின் மானிய திட்டங்களின் மூலம் கடந்த 4 ஆண்டுகளில் இம்மாவட்டத்தை சேர்ந்த 834 தொழில் முனைவோருக்கு ரூ.90.95 கோடி கடன் வழங்க திட்டம் வகுத்ததில், ரூ.66.08 கோடி வரை கடன் பெற்றுள்ளனர்.
இதற்காக மானியமாக மட்டுமே அரசு தொழில் முனைவோருக்கு ரூ.19.81 கோடியை விடுவித்துள்ளது. எனவே மாவட்ட அளவில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை மேம்படுத்த மத்திய, மாநில அரசுகள் மானியத்துடன் கூடிய கடனுதவி திட்டங்களை அவ்வப்போது வகுத்து வருகிறது.
இது போன்ற திட்டங்களை மாவட்ட தொழில் மையத்தை அணுகி கேட்டு பெற்று பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.